2970. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் என்னை மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். நான் (என் கணவர் வீட்டில் "இத்தா" மேற்கொண்டால்) அத்துமீறி யாரும் புகுந்துவிடலாம் என அஞ்சுகிறேன்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கிருந்து இடம் மாறிக்கொள்ள) எனக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நான் இடமாறி ("இத்தா" மேற்)கொண்டேன்.
அத்தியாயம் : 18
2971. காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இதைக் கூறுவதால் -அதாவது (மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண்ணுக்கு) உறைவிடமும் இல்லை;ஜீவனாம்சமும் இல்லை என்று கூறிவருவதால்- ஃபாத்திமா பின்த் கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.23
- உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகமுடைய புதல்வியான இன்ன பெண்ணைப் பார்த்தீர்களா? அவரை அவருடைய கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். (தம் கணவர் வீட்டில் இத்தா இருக்காமல்) அவர் வெளியேறி (மற்றோர் இடத்திற்குச் சென்று)விட்டாரே?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் செய்தது தவறு" என்றார்கள். நான், "ஃபாத்திமா பின்த் கைஸ், (தான், மற்றோர் இடத்தில் "இத்தா" இருந்தது பற்றிக்) கூறிவருவதை நீங்கள் கேள்விப்படவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "இந்தச் செய்தியைக் கூறிவருவதில் ஃபாத்திமாவுக்கு எந்த நன்மையுமில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 18
பாடம் : 7 முற்றாக மணவிலக்குச் செய்யப்பட்டுவிட்ட பெண்ணும் கணவன் இறந்துபோன பெண்ணும் "இத்தா"விலிருக்கும்போது தம் தேவைக்காக வெளியே செல்லலாம்.
2972. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா"வில் இருந்தபோது) தமது பேரீச்சமரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக்கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்சமரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக்கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்" என்றார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
பாடம் : 8 கணவன் இறந்துபோன பெண் உள்ளிட்டோர் (கர்ப்பமுற்றிருந்தால் அவர்களது) "இத்தா"க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும்.
2973. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள், உமர் பின் அப்தில்லாஹ் பின் அல்அர்கம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அல்அஸ்ல மிய்யா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்கத் தீர்ப்புக் கேட்டதைப் பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி சுபைஆ (ரலி) அவர்களிடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (கேட்டறிந்து என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்:
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். -சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவராவார்.- "விடைபெறும்" ஹஜ்ஜின்போது சஅத் (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்கள். அப்போது சுபைஆ கர்ப்பமுற்றிருந்தார். சஅத் (ரலி) அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து சுபைஆ தூய்மையானபோது, பெண் கேட்க வருபவர்களுக்காகத் தன்னை அவர் அலங்கரித்துக்கொண்டார். அப்போது பனூ அப்தித்தார் குலத்தில் ஒருவரான அபுஸ் ஸனாபில் பின் பஅகக் (ரலி) அவர்கள் சுபைஆவிடம் வந்து, திருமணம் செய்யும் ஆசையில் (பெண் கேட்க வருபவர்களுக்காக) உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய "இத்தா"க் காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் செய்துகொள்ள முடியாது" என்று சொன்னார்கள்.
சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, "நீ பிரசவித்துவிட்டபோதே (மணம் செய்துகொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய்"என்று தீர்ப்பு வழங்கிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்" என உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(கணவன் இறந்த) ஒரு பெண் பிரசவித்தவுடன் -பிரசவ இரத்தப்போக்கு இருக்கும் போதே- (மறு)மணம் செய்துகொள்வதில் தவறிருப்பதாக நான் கருதவில்லை; ஆயினும், அவள் தூய்மையடையும்வரை அவளுடைய (புதிய) கணவன் அவளை (தாம்பத்திய உறவுக்காக) நெருங்கக் கூடாது.
அத்தியாயம் : 18
2974. சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் ஒன்றுகூடினர். கணவன் இறந்துவிட்ட பெண் ஒரு சில இரவுகளில் பிரசவித்துவிடுவது பற்றி(யும்,அவ்வாறு பிரசவித்துவிட்டால் அவளது "இத்தா" அத்துடன் முடிந்துவிடுமா, இல்லையா என்பது பற்றியும்) அவர்களிருவரும் பேசிக் கொண்டனர்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இரு தவணைகளில் பிந்தியதே அவளது இத்தாவாகும்" என்றார்கள்.அபூசலமா (ரஹ்) அவர்கள், "(பிரசவித்தவுடன்) அவள் (மறுமணம் செய்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாள்" என்று கூறினார்கள்.
இது குறித்து இருவரும் விவாதித்துக்கொண்டிருந்தபோது, அபூஹுரைரா (ரலி) அவர்கள், "(இந்த விஷயத்தில்) நான் என் சகோதரர் மகன் (அபூசலமா) உடன் (ஒத்து) இருக்கிறேன்" என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் அது குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பணியாளர் குறைப் (ரஹ்) அவர்களை (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தனர். அவர் (சென்றுவிட்டுத்) திரும்பிவந்து உம்மு சலமா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் எனத் தெரிவித்தார்:
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்கள், தம் கணவர் (சஅத் பின் கவ்லா) இறந்த சில இரவுகளில் குழந்தை பெற்றெடுத்தார். அவர் அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது,அவரை (மறு)மணம் செய்துகொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர் களது அறிவிப்பில், உடனே அவர்கள் (மூவரும்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பினார்கள் என (பொதுவாக) இடம் பெற்றுள்ளது. குறைபின் பெயரைக் குறிப்பிட வில்லை.
அத்தியாயம் : 18
பாடம் : 9 கணவன் இறந்து "இத்தா"விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது கட்டாயமாகும்; மற்ற நேரங்களில் மூன்று நாட்கள் தவிர துக்கம் கடைப்பிடிப்பது தடை செய்யப்பட்டதாகும்.
2975. ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அது அவருடைய தந்தை அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் (சிரியா நாட்டில்) இறந்த நேரம். (மூன்றாவது நாளில்) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மஞ்சள் நிறமுள்ள கலவையான நறுமணப்பொருளை, அல்லது வேறொன்றைக் கொண்டுவருமாறு கூறி, அதை (அங்கிருந்த) ஒரு சிறுமியின் மீது தடவினார்கள். பிறகு தம் இரு கன்னங்களிலும் தடவிக்கொண்டார்கள். பிறகு "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீதிருந்தபடி "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும், இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர" என்று கூறக்கேட்டுள்ளேன். (ஆதலால்தான் இப்போது நறுமணம் பூசினேன்)" என்றார்கள்.
- பின்னர் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அது அவருடைய சகோதரர் இறந்த நேரம். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண்டார்கள்.
பின்னர், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர" என்று கூறக் கேட்டுள்ளேன்"என்றார்கள்.
- என் தாயார் உம்மு சலமா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறக் கேட்டுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் மகளுடைய கணவர் இறந்துவிட்டார். (இத்தாவிலிருக்கும்) என் மகளின் கண்ணில் வலி ஏற்பட்டுவிட்டது. அவளுக்கு நாங்கள் அஞ்சனம் (சுர்மா) தீட்டிவிடலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்று -இரண்டு அல்லது மூன்று முறை- கூறினார்கள். ஒவ்வொரு முறையும் "வேண்டாம்" என்றே கூறினார்கள். பிறகு, "(கணவனை இழந்த ஒரு பெண்ணின்) "இத்தா"க் காலம் நான்கு மாதங்களும் பத்து நாட்களும்தாம். (ஆனால்,)அறியாமைக் காலத்தில் உங்களில் (கணவனை இழந்த) ஒரு பெண் (ஒரு வருடம் இத்தா இருப்பாள்.) ஆண்டின் முடிவில் ("இத்தா" நிறைவுற்றதன் அடையாளமாக) ஒட்டகச்சாணத்தை எறிவாள். (அந்த நிலை இப்போது இல்லையே)" என்றார்கள்.
- ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களிடம், "ஆண்டின் முடிவில் ஒட்டகச் சாணத்தை எறிவாள் என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
(அறியாமைக் காலத்தில்) ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்துகொண்டு, தன் ஆடைகளிலேயே மிகவும் மோசமானதை அணிந்து கொள்வாள். ஒரு வருடம் கழியும்வரை எந்த நறுமணத்தையும் வேறு எதையும் தொடமாட்டாள். (ஓராண்டு கழிந்த) பிறகு கழுதை, ஆடு போன்ற கால்நடை ஒன்று, அல்லது பறவை ஒன்று (அவளிடம்) கொண்டுவரப்படும். அதன் மீது (அழுக்குத் திரண்ட தனது உடலைக்) கடுமையாகத் தேய்த்துக்கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும் எந்த உயிரினமும் (அந்த முடை நாற்றத்தால்) சாகாமல் பிழைத்தல் அரிது. பிறகு அவள் (அந்தக் குடிசையிலிருந்து) வெளியே வருவாள். அப்போது (அவளிடம்) ஒட்டகச் சாணம் கொடுக்கப்படும். உடனே அவள் அதை (தனக்கெதிரே) தூக்கி எறிந்துவிடுவாள். (இதுவே "இத்தா"முடிந்ததற்கு அடையாளமாகும்.) பிறகு அவள் தான் விரும்பிய நறுமணத்தையோ மற்ற பொருட்களையோ பழையபடி உபயோகித்துக்கொள்வாள்.
மேற்கண்ட மூன்று ஹதீஸ்களையும் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களே அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 18
2976. ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது
உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து (இரண்டு நாட்கள் கழிந்து)விட்டபோது,அவர்கள் மஞ்சள் நிறமுடைய ஒரு வகை நறுமணப் பொருளைக் கொண்டுவருமாறு கூறி, அதைத் தமது முன்கையில் தடவிக்கொண்டார்கள். பிறகு "நான் இவ்வாறு செய்வதற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும் (இறந்துபோன ஒருவருக்காக) மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!" என்று கூறக் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸை, ஸைனப் பின்த் அபீ சலமா (ரலி) அவர்கள் தம் தாயார் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தும், நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அல்லது வேறொரு துணைவியாரிடமிருந்தும் அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 18
2977. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். ("இத்தா" வில் இருந்த அவளது கண்ணில் வலி ஏற்பட்டதால்) அவளது கண் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக் கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அறியாமைக் காலத்தில் கணவன் இறந்த பின்) மனைவி அவளுடைய ஆடைகளிலேயே மிக மோசமானதை அணிந்துகொண்டு, அற்பமான ஒரு குடிலுக்குள் ஒரு வருடம் தங்கியிருப்பாள். பின்னர் (அவ்வழியாகக்) கடந்துசெல்லும் ஏதேனும் ஒரு நாய்மீது ஒட்டகச்சாணத்தை அவள் வீசியெறிவாள். பின்னர் அக்குடிலை விட்டும் வெளியேறுவாள். (இஸ்லாம் வந்த பின் இழிவு நிலையுடன்கூடிய ஒரு வருட "இத்தா" என்பது மாறி) நான்கு மாதம் பத்து நாட்கள் (மட்டும் கண்ணியத்துடன் தங்கும் நிலை) ஏற்படவில்லையா?" என்று கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2978. உம்மு சலமா (ரலி) மற்றும் உம்மு ஹபீபா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் புதல்வியின் கணவர் இறந்து விட்டார். (அவள் தற்போது "இத்தா" இருக்கும் நிலையில்) அவளது கண்ணில் வலி ஏற்பட்டுள்ளது. எனவே, அவளுக்கு நான் அஞ்சனம் தீட்டிவிட விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அறியாமைக் காலத்தில் கணவன் இறந்த பின்) மனைவி ஓராண்டு நிறைவடையும்போது ஒட்டகச் சாணத்தை விட்டெறிவாள். (ஓராண்டு காலம் துக்கம் கடைப்பிடித்து "இத்தா" இருந்துவந்தாள். இந்த அவலம் நீங்கி,) "இத்தா" நான்கு மாதம் பத்து நாட்கள் மட்டுமே (என்றாகிவிட்டதே)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2979. ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தம் தந்தை அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் இறப்புச் செய்தி வந்தபோது, உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மூன்றாவது நாளில் மஞ்சள் நிற (நறுமண)ப் பொருளைக் கொண்டு வரச் சொல்லி, அதைத் தம் முன்கைகளிலும் கன்னங்களிலும் தடவிக்கொண்டார்கள். மேலும், "இந்த நறுமணப் பொருளின் தேவையற்றவளாகவே நான் இருந்தேன். (ஆயினும்) நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் (இறந்துபோன ஒருவருக்காக) மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை; ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர" என்று சொல்லக் கேட்டேன் (எனவே தான், இப்போது நறுமணம் தடவிக்கொண்டேன்)"என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2980. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட" அல்லது "அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நம்பிக்கை கொண்ட" எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை; ஆனால், தன் கணவனுக்காக (நான்கு மாதம் பத்து நாட்கள்) தவிர!
இதை ஹஃப்ஸா (ரலி) அவர்கள், அல்லது ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லது அவ்விருவரும் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2981. மேற்கண்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவள் தன் கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் கடைப்பிடிப்பாள்" என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2982. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்து போன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை; தன் கணவனுக்காக (நான்கு மாதம் பத்து நாட்கள்) தவிர!
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2983. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது;கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர! (அந்நாட்களில்) அவள் சாயமிடப்பட்ட ஆடையை அணியமாட்டாள்;நெய்வதற்கு முன் நூலில் சாயமேற்றப்பட்டு, பின்பு நெய்யப்பட்ட ஆடையைத் தவிர! மேலும், அவள் அஞ்சனம் தீட்டிக் கொள்ளமாட்டாள்; நறுமணம் பூசிக்கொள்ளமாட்டாள்; ஆனால் (மாதவிடாயிலிருந்து) அவள் தூய்மையடைந்த பின்னர் தவிர! அப்போது "குஸ்த்" மற்றும் "அழ்ஃபார்" ஆகிய ஜாதிக் கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக்கொள்வாள்.
இதை உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அவள் தூய்மையடையும் சமயத்தில் தவிர!" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2984. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறந்துபோன எவருக்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் (பெண்களாகிய) நாங்கள் துக்கம் கடைப்பிடிக்கலாகாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தோம்; ஆனால், கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர! (அதாவது "இத்தா"வில் இருக்கும்போது) நாங்கள் அஞ்சனம் தீட்டிக்கொள்ளக்கூடாது; நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது; சாயமிடப்பட்ட ஆடையை அணியக் கூடாது (என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது); (பெண்களாகிய) எங்களில் ஒருவர் மாதவிடாயிலிருந்து குளித்துத் தூய்மையடையும்போது "குஸ்த்" மற்றும் "அழ்ஃபார்" ஆகிய ஜாதிக் கோஷ்டக் கட்டையால் நறுமணப் புகையிட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
அத்தியாயம் : 18

2985. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
உவைமிர் அல்அஜ்லானீ (ரலி) அவர்கள் ஆஸிம் பின் அதீ அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் வந்து, "ஆஸிமே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆணொருவன் (தகாத உறவு கொண்டபடி) இருப்பதைக் கண்டால், அவனை இந்த மனிதன் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், பழிவாங்கும் சட்டப்படி அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்? ஆஸிமே! எனக்காக இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்றார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் (இது குறித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை; அவற்றை அசிங்கமாகக் கருதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து வந்த (கண்டன) வார்த்தைகள் ஆஸிம் (ரலி) அவர்களுக்குப் பெருத்த மன வேதனை அளித்தன.
ஆஸிம் (ரலி) அவர்கள் தம் வீட்டாரிடம் திரும்பிவந்தபோது, அவர்களிடம் உவைமிர் (ரலி) அவர்கள் வந்து, "ஆஸிமே! உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள் உவைமிரை நோக்கி, "நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (என்னைச் சிக்க வைத்துவிட்டாய்;) நான் கேட்ட கேள்வி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்கவில்லை" என்றார்கள். அதற்கு உவைமிர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது குறித்து நானே (நேரடியாக) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்" என்று கூறிவிட்டு, மக்களுக்கு மத்தியில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள்.
பிறகு, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவன் அந்த ஆடவனைக் கொன்றுவிடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்,சொல்லுங்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் (வசனம்) அருளப்பெற்றுவிட்டது. ஆகவே, நீர் சென்று உம்முடைய மனைவியை அழைத்துவாரும்" என்றார்கள்.
(பிறகு அவர்கள் இருவரும் வந்தனர்.) நான் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தபோது,அவர்கள் இருவரும் பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தனர். அவர்கள் "லிஆன்” செய்து முடித்தபோது, உவைமிர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால், இவள் மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) சொன்னவனாக ஆகிவிடுவேன்" என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை மூன்று தலாக் சொல்லிவிட்டார்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு இதுவே சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆனது.
அத்தியாயம் : 19
2986. மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த உவைமிர் அல்அன்சாரி (ரலி) அவர்கள் ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்களிடம் வந்தார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும், அதில் "உவைமிர் (ரலி) அவர்கள் தம் மனைவியைவிட்டுப் பிரிந்துகொண்டதே பின்னர் பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொள்ளும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆயிற்று" என்பது விளக்க இடைச்சேர்ப்பாக இடம்பெற்றுள்ளது. மேலும், "லிஆன் நடந்தபோது அப்பெண் கர்ப்பமுற்றிருந்தார். அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை அதன் தாயோடு இணைத்துத்தான் (இன்ன பெண்ணின் மகன் என்று) அழைக்கப்படலாயிற்று. பின்னர் அப்பெண்ணிடமிருந்து மகனும் மகனிடமிருந்து அப்பெண்ணும் அவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த முறையில் வாரிசாவார்கள் என்ற நடைமுறையும் வந்தது" என்று அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 19
2987. மேற்கண்ட ஹதீஸ் பனூ சாஇதா குலத்தவரான சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அன்சாரிகளில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால்...” என்று கேட்டார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே தொடருகின்றன.
இந்த அறிவிப்பில், "எனவே, அவர்கள் இருவரும் பள்ளிவாசலில் வைத்துச் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்து கொண்டார்கள். அப்போது அங்கு நானும் இருந்தேன்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மேலும், "(லிஆன் பிரமாணம் முடிந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிடுவதற்கு முன்பே அவளை அவர் மூன்று தலாக் சொல்லிவிட்டார். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையிலேயே அவளை விட்டும் அவர் பிரிந்துகொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "இதுவே "லிஆன்” செய்யும் ஒவ்வொரு தம்பதியரைப் பிரித்துவைக்கும் வழிமுறையாகும்” என்று கூறினார்கள் என்பதும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 19
2988. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஸ்அப் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களது ஆட்சிக்காலத்தில் என்னிடம் "சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட தம்பதியர் பிரித்துவைக்கப்படுவார்களா? (அல்லது "லிஆன்” பிரமாணத்தை மொழிந்ததும் தானாக மணவிலக்கு ஏற்பட்டுவிடுமா?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, நான் (கூஃபாவிலிருந்து) புறப்பட்டு மக்காவிலிருந்த இப்னு உமர் (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அவர்களுடைய பணியாளிடம், "எனக்காக (உள்ளே வர) அனுமதி கேள்"என்றேன். "அவர்கள் மதிய ஓய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்" என அவர் பதிலளித்தார். எனது குரலைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், "இப்னு ஜுபைரா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்” என்றேன். "உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதோ அலுவல்தான் உங்களை இந்த நேரத்தில் (என்னிடம்) கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும்" என்று கூறினார்கள்.
நான் உள்ளே சென்றேன். அப்போது அவர்கள் ஒட்டகத்தின் மேல் விரிக்கப்படும் விரிப்பொன்றை விரித்து, பேரீச்சநார் நிரப்பப்பட்ட ஒரு தலையணையில் சாய்ந்திருந்தார்கள். நான், "அபூ அப்திர் ரஹ்மான்! பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் செய்துகொண்ட தம்பதியர் பிரித்து வைக்கப்படுவார்களா?" என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)! ஆம். (அவர்கள் "லிஆன்” செய்த பிறகு பிரித்துவைக்கப்படுவார்கள்); இதைப் பற்றி (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) முதன் முதலில் கேட்டவர் இன்ன மனிதரின் புதல்வர் இன்ன மனிதர் ஆவார். அவர், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தம் மனைவி (அந்நிய ஆடவனுடன்) மானக்கேடான செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? (அதை) அவர் (வெளியே) சொன்னால், ஒரு பெரிய விஷயத்தைச் சொன்னவராகி விடுவார். மௌனமாக இருந்தாலும்,அதைப் போன்ற ஒரு விஷயத்தில் மௌனமாக இருந்தவராகிவிடுவாரே?" என்று கேட்டார். அதற்குப் பதிலேதும் சொல்லாமல் நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். அதன் பின்னர் அவர் கேட்டது (போன்றே ஒரு நிகழ்ச்சி) நடந்தபோது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் எதைப் பற்றித் தங்களிடம் கேட்டேனோ அதன் மூலம் நானே சோதிக்கப்பட்டுள்ளேன்" என்று கூறினார். அப்போது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "தம்மைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தம் மனைவியர்மீது பழி சுமத்துவோர், தாம் உண்மையாளர் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்" என்று தொடங்கி, "தன்மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூறுவாள்)" (24:6-9) என்பது வரையிலான வசனங்களை அருளினான்.
அவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மனிதருக்கு ஓதிக் காட்டி, அவருக்கு அறிவுரை கூறினார்கள்; (அல்லாஹ்வின் தண்டனைகளை) நினைவூட்டினார்கள்; "இம்மையின் தண்டனை மறுமையின் தண்டனையைவிட மிக எளிதானதாகும்” என்றும் தெரிவித்தார்கள். அதற்கு அந்த மனிதர் "இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் அவள்மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லவில்லை" என்றார்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அழைத்து அவளுக்கு அறிவுரை கூறினார்கள்; (அல்லாஹ்வின் தண்டனையை) நினைவூட்டினார்கள்; "இம்மையின் தண்டனை மறுமையின் தண்டனையைவிட மிக எளிதானதாகும்” என்றும் தெரிவித்தார்கள். அதற்கு அப்பெண், "இல்லை; தங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர் பொய்யர்" என்று கூறினாள். எனவே, முதலில் அந்த ஆணிடமிருந்து (சாப அழைப்புப் பிரமாணத்தை) நபியவர்கள் ஆரம்பித்தார்கள். அவர் (தமது குற்றச்சாட்டில்) தாம் உண்மையாளர் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு நான்கு முறை உறுதிமொழிந்தார். ஐந்தாவது முறையில், (தனது குற்றச்சாட்டில்) தான் பொய்யராக இருந்தால் "அல்லாஹ்வின் சாபம் என்மீது உண்டாகட்டும்” என்று அவர் கூறினார்.
இரண்டாவதாக அந்தப் பெண்ணை அழைத்தார்கள். அவள் (தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் வகையில்) "அவர் பொய்யர் ஆவார்” என நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு உறுதிமொழிந்தாள். ஐந்தாவதாக "அவர் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளராக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்” என்று அவள் கூறினாள். பிறகு இருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் செய்துகொண்ட தம்பதியர் பற்றி முஸ்அப் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களது (ஆட்சிக்) காலத்தில் என்னிடம் வினவப்பட்டது. அதற்கு என்ன பதிலளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 19
2989. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட தம்பதியரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். (இனி) அவள்மீது (கணவராகிய) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று சொன்னார்கள். உடனே அவர், "அல்லாஹ்வின் தூதரே! (நான் இவளுக்கு மணக்கொடையாக அளித்த) எனது பொருள் (என்ன ஆவது? அதைத் திரும்பப்பெற்றுக் கொள்ளலாமா)?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்கு (அந்தப்) பொருள் கிடைக்காது. நீர் அவள் விஷயத்தில் (சொன்ன குற்றச்சாட்டில்) உண்மையாளராய் இருந்தால், அவளது கற்பை நீர் பயன்படுத்திக்கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். அவள்மீது நீர் பொய் சொல்லியிருந்தால் (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகுதூரத்தில் உள்ளது" என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19