2956. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் "இந்த ஹதீஸை நான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களது வாயிலிருந்து (நேரடியாக) செவியுற்று எழுதிவைத்துக்கொண்டேன்" என்று கூறினார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும் "நான் பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்த தலாக் சொல்லி விட்டார். அப்போது நான் என் கணவரின் குடும்பத்தாரிடம் ஆளனுப்பி எனது ஜீவனாம்சத்தைக் கோரினேன்" என்று ஹதீஸ் தொடருகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
முஹம்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உனது (மறுமணம்) விஷயத்தில் நம்மைவிட்டு (நீயாக முடிவெடுத்து)விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2957. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர் கள் கூறியதாவது:
நான் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல் முஃகீரா (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை (இரு தலாக் சொல்லி திரும்ப அழைத்துக்கொண்டு) இறுதி(யாக எஞ்சியிருந்த) மூன்றாவது தலாக் சொல்லிவிட்டார்.
அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, என் (கணவரின்) இல்லத்திலிருந்து வெளியேறி (வேறு இடத்தில் "இத்தா" இருந்து)கொள்வது தொடர்பாகத் தீர்ப்புக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கண் தெரியாதவரான இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களது இல்லத்திற்கு இடமாறிக்கொள்ள உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸை அறிவிப்பவரான அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(மூன்று) தலாக் சொல்லப்பட்டுவிட்ட ஒரு பெண், தனது இல்லத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான இந்த ஹதீஸை மர்வான் பின் அல்ஹகம் நம்ப மறுத்தார்.
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள், ஃபாத்திமா பின்த் கைஸ் அவ்வாறு (செய்யலாம் என்று) கூறிவந்ததை நிராகரித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், ஆயிஷா (ரலி) அவர்கள்,ஃபாத்திமா பின்த் கைஸ் அவ்வாறு கூறிவந்ததை நிராகரித்தார்கள் என்கிற உர்வா (ரஹ்) அவர்களின் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2958. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல் முஃகீரா (ரலி) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் யமன் நாட்டிற்குச் சென்றிருந்தார்கள். அப்போது அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் (ரலி) அவர்கள் தம் மனைவியின் தலாக்கில் எஞ்சியிருந்த ஒரு தலாக்கையும் சொல்லியனுப்பினார். தம் மனைவிக்கு ஜீவனாம்சத்தைக் கொடுக்க ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்களையும் அய்யாஷ் பின் அபீரபீஆ (ரலி) அவர்களையும் பணித்தார். அவர்கள் இருவரும் அவருடைய மனைவியிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீ கர்ப்பமுற்றவளாக இருந்தால்தான் உனக்கு ஜீவனாம்சம் கிடைக்கும்" என்று கூறிவிட்டனர்.
உடனே அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்கள் இருவரும் கூறியதைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "உனக்கு ஜீவனாம்சம் இல்லை" என்று கூறினார்கள். அப்போது அவர் (தம் கணவரின் இல்லத்திலிருந்து) இடம் மாறிக்கொள்ள அனுமதி கோரினார். நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். அப்போது அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் எங்கே (தங்குவேன்)?" என்று கேட்டார். அதற்கு, "இப்னு உம்மி மக்தூமின் வீட்டிற்குச் செல்" என்றார்கள். அவர் கண் பார்வையற்றவராக இருந்தார். (எனவே) அப்பெண் அவர் அருகில் உடைமாற்றினாலும் அவரால் பார்க்க முடியாத நிலையில் இருந்தார். (இப்னு உம்மி மக்தூமின் வீட்டில்) அப்பெண்ணின் "இத்தா"க் காலம் முடிந்ததும் அவரை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்துவைத்தார்கள்.
பின்னர் (மதீனாவின் அப்போதைய ஆட்சியராயிருந்த) மர்வான் அப்பெண்ணிடம் கபீஸா பின் துவைப் (ரஹ்) அவர்களை அனுப்பி அந்த ஹதீஸைக் குறித்துக் கேட்டார். அவர் மர்வானுக்கு அந்த ஹதீஸைத் தெரிவித்தார். அதற்கு மர்வான், "ஒரேயொரு பெண்ணிடமிருந்துதான் நாம் இந்த ஹதீஸைக் கேள்விப்படுகிறோம். மக்கள் எந்த நடைமுறையை வலுவாகக் கடைப்பிடித்துவருவதை நாம் காண்கிறோமோ அதையே நாம் (தொடர்ந்து) செயல்படுத்துவோம்" என்று கூறினார். "எனக்கும் உங்களுக்குமிடையே குர்ஆன் உள்ளது. (அதில்) அல்லாஹ், "அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்" (65:1) என்று கூறியுள்ளான்" என மர்வான் கூறிய தகவல், ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது, "இது திரும்ப அழைத்துக்கொள்ளும் உரிமையுடைய கணவர்களுக்கு உரியதாகும். மூன்று தலாக்கிற்குப் பிறகு (திரும்ப அழைத்தல் போன்ற) என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப்போகிறது? அவள் கர்ப்பமுற்றவளாக இல்லாவிடில் அவளுக்கு ஜீவனாம்சம் இல்லை என நீங்கள் எப்படிக் கூறுகிறீர்கள்? பிறகு (ஜீவனாம்சம் பெறாத) அந்தப் பெண்ணை எந்த அடிப்படையில் தடுத்து வைத்துக்கொள்கிறீர்கள்?" என்று கேட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2959. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பைக் குறித்துக் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள், "என்னை என் கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். ("இத்தா"க் கால) ஜீவனாம்சம் மற்றும் உறைவிடம் விஷயத்தில் அவர்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் வழக்கு தொடுத்தேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உறைவிடமோ ஜீவனாம்சமோ வழங்கச் செய்யவில்லை. என்னை (என் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களது இல்லத்தில் "இத்தா" மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட தகவல் ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2960. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றோம். எங்களுக்கு அவர்கள் (மதீனாவின்) "ருதப் இப்னு தாப்" (எனும் வகை) பேரீச்சம் பழத்தை விருந்தாகக் கொடுத்தார்கள். ஒரு வகை தானிய மாவுக் கஞ்சியை எங்களுக்கு அருந்தக் கொடுத்தார்கள். அவர்களிடம் நான் "மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண் எங்கு "இத்தா" இருப்பாள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "என் கணவர் என்னை மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், என் குடும்பத்தாரிடமே நான் "இத்தா" இருக்க எனக்கு அனுமதியளித்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 18
2961. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண் குறித்து நபி (ஸல்) அவர்கள், "அவளுக்கு உறைவிடமும் இல்லை;ஜீவனாம்சமும் இல்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2962. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது வேறு இடத்திற்கு இடம்மாறிச் செல்ல நான் விரும்பினேன். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அதற்காக அனுமதி கோரினேன்.) நபி (ஸல்) அவர்கள் "நீ இடம்பெயர்ந்து, உன் தந்தையின் சகோதரர் புதல்வர் அம்ர் பின் உம்மி மக்தூம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அங்கு "இத்தா" இரு" என்று கூறி னார்கள்.
அத்தியாயம் : 18
2963. அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களுடன் (கூஃபாவின்) பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸை ஷஅபீ (ரஹ்) அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை; ஜீவனாம்சமும் இல்லை" என அறிவித்தார்கள் (என்பதுதான் அந்த ஹதீஸ்). (அங்கிருந்த) அஸ்வத் (ரஹ்) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர்மீது எறிந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: "உமக்குக் கேடுதான்! இது போன்ற செய்திகளை அறிவிக்கிறீரே? உமர் (ரலி) அவர்கள், "ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நம் நபியின் வழிமுறையையும் கைவிடமாட்டோம். ஃபாத்திமா பின்த் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா, அல்லது மறந்துவிட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "பகிரங்கமான வெட்கக்கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்" (65:1) என்று கூறியுள்ளான்"என்றார்கள்.
- மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2964. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் கணவர் மூலம்) உறைவிடமும் ஏற்படுத்தவில்லை; ஜீவனாம்சமும் ஏற்படுத்தவில்லை. என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உன் "இத்தா"க் காலத்தை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக" என்றார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் தெரிவித்தேன். என்னை முஆவியா (ரலி), அபூஜஹ்ம் (ரலி), உசாமா பின் ஸைத் (ரலி) ஆகியோர் பெண் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஆவியாவோ, ஓர் ஏழை;அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. அபூஜஹ்மோ மனைவியரை அதிகமாக அடிக்கக்கூடியவர். மாறாக, உசாமா பின் ஸைதே (உனக்குப் பொருத்த மானவர்)" என்றார்கள். உடனே நான் "உசாமா; (பெரிய) உசாமா" என கையால் சைகை செய்(து அதிருப்தி தெரிவித்)தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதும் அவனுடைய தூதருக்குக் கட்டுப்படுவதும் உனக்கு நல்லது" என்றார்கள். பின்னர் உசாமாவையே நான் மணந்துகொண்டேன். நான் பெருமிதம் அடைந்தேன்.
அத்தியாயம் : 18
2965. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் கணவர் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா அவர்கள், அய்யாஷ் பின் அபீரபீஆ மூலம் எனக்குத் தலாக் சொல்லி அனுப்பினார். அவருடன் ஐந்து "ஸாஉ" பேரீச்சம் பழமும் ஐந்து "ஸாஉ" தொலி நீக்கப்படாத கோதுமையும் கொடுத்தனுப்பினார். நான் அவரிடம், "எனக்கு இதைத் தவிர வேறெதுவும் ஜீவனாம்சம் இல்லையா? நான் உங்கள் வீட்டில் "இத்தா" இருக்கமாட்டேன்" என்று சொன்னேன். அதற்கு அய்யாஷ் அவர்கள், "இல்லை (வேறெதுவும் ஜீவனாம்சம் கிடையாது)" என்று சொல்லிவிட்டார். உடனே நான் எனது ஆடையை எடுத்து அணிந்துகொண்டு,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் உனக்கு எத்தனை தலாக் சொன்னார்?" என்று கேட்டார்கள். நான் "மூன்று (தலாக்)" என்றேன். (அவ்வாறாயின்) அவர் சொன்னது உண்மையே. உனக்கு ஜீவனாம்சம் இல்லை. நீ உன் தந்தையின் சகோதரர் புதல்வர் இப்னு உம்மி மக்தூம் அவர்களது இல்லத்தில் "இத்தா" இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்றவர். நீ உனது (துப்பட்டா) துணியை அவர் அருகில் கழற்றிவைக்கலாம். உன் "இத்தா"க் காலம் முடிந்ததும் எனக்குத் தெரிவி" என்று சொன்னார்கள். பின்னர் என்னைப் பலர் பெண் கேட்டார்கள். அவர்களில் முஆவியா (ரலி), அபூஜஹ்ம் (ரலி) ஆகியோரும் அடங்குவர். (நான் நபியவர்களிடம் அது குறித்து தெரிவித்தபோது) நபி (ஸல்) அவர்கள், "முஆவியா வசதி குறைந்தவர்; ஏழை. அபூஜஹ்மிடம், பெண்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் சுபாவம் உள்ளது. (அல்லது பெண்களை அடித்து விடுபவர் என்பதைப் போன்று.) மாறாக, நீ உசாமா பின் ஸைதைப் பிடித்துக்கொள்" என்றார்கள்.
அத்தியாயம் : 18
2966. அபூபக்ர் பின் அபில்ஜஹ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்று (அவர்களது நிகழ்ச்சி குறித்து) கேட்டோம். அவர், "நான் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். அப்போது அவர் நஜ்ரான் போருக்குப் புறப்பட்டார்" என்று கூறினார் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இறுதியில் "எனவே, நான் (அபூஸைத்) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னை மேன்மைப் படுத்தினான்; அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னைக் கண்ணியப் படுத்தினான்" என ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2967. அபூபக்ர் பின் அபில்ஜஹ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது (ஆட்சிக்) காலத்தில் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள், "என் கணவர் என்னை முற்றாகத் தலாக் சொல்லி, அதை முடிவுக்குக் கொண்டுவந்தார்" என்று கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 18
2968. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்கு (என் கணவர் மூலம் "இத்தா"க் காலத்தில்) உறைவிடத்தையோ ஜீவனாம்சத்தையோ ஏற்படுத்தவில்லை.
அத்தியாயம் : 18
2969. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஹ்யா பின் சயீத் பின் அல்ஆஸ் (ரஹ்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகம் (ரஹ்) அவர்களின் புதல்வியைத் திருமணம் செய்திருந்தார். பின்னர் அவரை (மூன்று) தலாக் சொல்லி, தம் வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். நான் அவர்களை (அவருடைய குடும்பத்தாரை) இது குறித்துக் கண்டித்தேன். அதற்கு அவர்கள், "ஃபாத்திமா பின்த் கைஸ் ("இத்தா"க் காலத்தில் தமது கணவரின் இல்லத்திலிருந்து) வெளியேறினாரே?" என்று கூறினார்கள். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "இந்த ஹதீஸைக் கூறுவதால் ஃபாத்திமா பின்த் கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 18
2970. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் என்னை மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். நான் (என் கணவர் வீட்டில் "இத்தா" மேற்கொண்டால்) அத்துமீறி யாரும் புகுந்துவிடலாம் என அஞ்சுகிறேன்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கிருந்து இடம் மாறிக்கொள்ள) எனக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நான் இடமாறி ("இத்தா" மேற்)கொண்டேன்.
அத்தியாயம் : 18
2971. காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இதைக் கூறுவதால் -அதாவது (மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண்ணுக்கு) உறைவிடமும் இல்லை;ஜீவனாம்சமும் இல்லை என்று கூறிவருவதால்- ஃபாத்திமா பின்த் கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.23
- உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகமுடைய புதல்வியான இன்ன பெண்ணைப் பார்த்தீர்களா? அவரை அவருடைய கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். (தம் கணவர் வீட்டில் இத்தா இருக்காமல்) அவர் வெளியேறி (மற்றோர் இடத்திற்குச் சென்று)விட்டாரே?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் செய்தது தவறு" என்றார்கள். நான், "ஃபாத்திமா பின்த் கைஸ், (தான், மற்றோர் இடத்தில் "இத்தா" இருந்தது பற்றிக்) கூறிவருவதை நீங்கள் கேள்விப்படவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "இந்தச் செய்தியைக் கூறிவருவதில் ஃபாத்திமாவுக்கு எந்த நன்மையுமில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 18
பாடம் : 7 முற்றாக மணவிலக்குச் செய்யப்பட்டுவிட்ட பெண்ணும் கணவன் இறந்துபோன பெண்ணும் "இத்தா"விலிருக்கும்போது தம் தேவைக்காக வெளியே செல்லலாம்.
2972. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா"வில் இருந்தபோது) தமது பேரீச்சமரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக்கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்சமரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக்கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்" என்றார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
பாடம் : 8 கணவன் இறந்துபோன பெண் உள்ளிட்டோர் (கர்ப்பமுற்றிருந்தால் அவர்களது) "இத்தா"க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும்.
2973. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள், உமர் பின் அப்தில்லாஹ் பின் அல்அர்கம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அல்அஸ்ல மிய்யா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்கத் தீர்ப்புக் கேட்டதைப் பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி சுபைஆ (ரலி) அவர்களிடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (கேட்டறிந்து என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்:
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். -சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவராவார்.- "விடைபெறும்" ஹஜ்ஜின்போது சஅத் (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்கள். அப்போது சுபைஆ கர்ப்பமுற்றிருந்தார். சஅத் (ரலி) அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து சுபைஆ தூய்மையானபோது, பெண் கேட்க வருபவர்களுக்காகத் தன்னை அவர் அலங்கரித்துக்கொண்டார். அப்போது பனூ அப்தித்தார் குலத்தில் ஒருவரான அபுஸ் ஸனாபில் பின் பஅகக் (ரலி) அவர்கள் சுபைஆவிடம் வந்து, திருமணம் செய்யும் ஆசையில் (பெண் கேட்க வருபவர்களுக்காக) உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய "இத்தா"க் காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் செய்துகொள்ள முடியாது" என்று சொன்னார்கள்.
சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, "நீ பிரசவித்துவிட்டபோதே (மணம் செய்துகொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய்"என்று தீர்ப்பு வழங்கிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்" என உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(கணவன் இறந்த) ஒரு பெண் பிரசவித்தவுடன் -பிரசவ இரத்தப்போக்கு இருக்கும் போதே- (மறு)மணம் செய்துகொள்வதில் தவறிருப்பதாக நான் கருதவில்லை; ஆயினும், அவள் தூய்மையடையும்வரை அவளுடைய (புதிய) கணவன் அவளை (தாம்பத்திய உறவுக்காக) நெருங்கக் கூடாது.
அத்தியாயம் : 18
2974. சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் ஒன்றுகூடினர். கணவன் இறந்துவிட்ட பெண் ஒரு சில இரவுகளில் பிரசவித்துவிடுவது பற்றி(யும்,அவ்வாறு பிரசவித்துவிட்டால் அவளது "இத்தா" அத்துடன் முடிந்துவிடுமா, இல்லையா என்பது பற்றியும்) அவர்களிருவரும் பேசிக் கொண்டனர்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இரு தவணைகளில் பிந்தியதே அவளது இத்தாவாகும்" என்றார்கள்.அபூசலமா (ரஹ்) அவர்கள், "(பிரசவித்தவுடன்) அவள் (மறுமணம் செய்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாள்" என்று கூறினார்கள்.
இது குறித்து இருவரும் விவாதித்துக்கொண்டிருந்தபோது, அபூஹுரைரா (ரலி) அவர்கள், "(இந்த விஷயத்தில்) நான் என் சகோதரர் மகன் (அபூசலமா) உடன் (ஒத்து) இருக்கிறேன்" என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் அது குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பணியாளர் குறைப் (ரஹ்) அவர்களை (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தனர். அவர் (சென்றுவிட்டுத்) திரும்பிவந்து உம்மு சலமா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் எனத் தெரிவித்தார்:
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்கள், தம் கணவர் (சஅத் பின் கவ்லா) இறந்த சில இரவுகளில் குழந்தை பெற்றெடுத்தார். அவர் அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது,அவரை (மறு)மணம் செய்துகொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர் களது அறிவிப்பில், உடனே அவர்கள் (மூவரும்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பினார்கள் என (பொதுவாக) இடம் பெற்றுள்ளது. குறைபின் பெயரைக் குறிப்பிட வில்லை.
அத்தியாயம் : 18
பாடம் : 9 கணவன் இறந்து "இத்தா"விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது கட்டாயமாகும்; மற்ற நேரங்களில் மூன்று நாட்கள் தவிர துக்கம் கடைப்பிடிப்பது தடை செய்யப்பட்டதாகும்.
2975. ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அது அவருடைய தந்தை அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் (சிரியா நாட்டில்) இறந்த நேரம். (மூன்றாவது நாளில்) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மஞ்சள் நிறமுள்ள கலவையான நறுமணப்பொருளை, அல்லது வேறொன்றைக் கொண்டுவருமாறு கூறி, அதை (அங்கிருந்த) ஒரு சிறுமியின் மீது தடவினார்கள். பிறகு தம் இரு கன்னங்களிலும் தடவிக்கொண்டார்கள். பிறகு "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீதிருந்தபடி "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும், இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர" என்று கூறக்கேட்டுள்ளேன். (ஆதலால்தான் இப்போது நறுமணம் பூசினேன்)" என்றார்கள்.
- பின்னர் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அது அவருடைய சகோதரர் இறந்த நேரம். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண்டார்கள்.
பின்னர், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர" என்று கூறக் கேட்டுள்ளேன்"என்றார்கள்.
- என் தாயார் உம்மு சலமா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறக் கேட்டுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் மகளுடைய கணவர் இறந்துவிட்டார். (இத்தாவிலிருக்கும்) என் மகளின் கண்ணில் வலி ஏற்பட்டுவிட்டது. அவளுக்கு நாங்கள் அஞ்சனம் (சுர்மா) தீட்டிவிடலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்று -இரண்டு அல்லது மூன்று முறை- கூறினார்கள். ஒவ்வொரு முறையும் "வேண்டாம்" என்றே கூறினார்கள். பிறகு, "(கணவனை இழந்த ஒரு பெண்ணின்) "இத்தா"க் காலம் நான்கு மாதங்களும் பத்து நாட்களும்தாம். (ஆனால்,)அறியாமைக் காலத்தில் உங்களில் (கணவனை இழந்த) ஒரு பெண் (ஒரு வருடம் இத்தா இருப்பாள்.) ஆண்டின் முடிவில் ("இத்தா" நிறைவுற்றதன் அடையாளமாக) ஒட்டகச்சாணத்தை எறிவாள். (அந்த நிலை இப்போது இல்லையே)" என்றார்கள்.
- ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களிடம், "ஆண்டின் முடிவில் ஒட்டகச் சாணத்தை எறிவாள் என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
(அறியாமைக் காலத்தில்) ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்துகொண்டு, தன் ஆடைகளிலேயே மிகவும் மோசமானதை அணிந்து கொள்வாள். ஒரு வருடம் கழியும்வரை எந்த நறுமணத்தையும் வேறு எதையும் தொடமாட்டாள். (ஓராண்டு கழிந்த) பிறகு கழுதை, ஆடு போன்ற கால்நடை ஒன்று, அல்லது பறவை ஒன்று (அவளிடம்) கொண்டுவரப்படும். அதன் மீது (அழுக்குத் திரண்ட தனது உடலைக்) கடுமையாகத் தேய்த்துக்கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும் எந்த உயிரினமும் (அந்த முடை நாற்றத்தால்) சாகாமல் பிழைத்தல் அரிது. பிறகு அவள் (அந்தக் குடிசையிலிருந்து) வெளியே வருவாள். அப்போது (அவளிடம்) ஒட்டகச் சாணம் கொடுக்கப்படும். உடனே அவள் அதை (தனக்கெதிரே) தூக்கி எறிந்துவிடுவாள். (இதுவே "இத்தா"முடிந்ததற்கு அடையாளமாகும்.) பிறகு அவள் தான் விரும்பிய நறுமணத்தையோ மற்ற பொருட்களையோ பழையபடி உபயோகித்துக்கொள்வாள்.
மேற்கண்ட மூன்று ஹதீஸ்களையும் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களே அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 18