2534. பக்ர் பின் அப்தில்லாஹ் அல்முஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இறையில்லம் கஅபா அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, "உங்கள் தந்தையின் சகோதரர் மக்கள், (ஹாஜிகளுக்கு) தேனும் பாலும் விநியோகிக்கின்றனர். நீங்களோ (உலர்ந்த திராட்சைப்) பழரசம் விநியோகிப்பதை நான் காண்கிறேனே, ஏன்? உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விட்டதா, அல்லது கருமித்தனம் செய்கிறீர்களா?" என்று கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. எங்களுக்கு எந்த வறுமையும் ஏற்பட்டுவிடவில்லை; கருமித்தனமும் செய்ய வில்லை. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) உசாமா (ரலி) அவர்கள் இருக்க, எங்களிடம் வந்து தண்ணீர் கேட்டார்கள். அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் நாங்கள் பழரசம் கொண்டுவந்(து கொடுத்)தோம். அவர்கள் அதைப் பருகிவிட்டு மீதியை உசாமா (ரலி) அவர்களுக்குப் பருகக் கொடுத்தார்கள். பிறகு, "நன்றே செய்தீர்கள்! நன்றே செய்தீர்கள்! இவ்வாறே செய்துவாருங்கள்!" என்று (எங்களைப் பாராட்டிக்) கூறினார்கள். எனவே,நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (உத்தரவுப்படியே செய்து வருகிறோம். அந்த) உத்தரவிற்கு மாற்றம் செய்ய நாங்கள் விரும்பவில்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 61 (ஹஜ்ஜில் அறுக்கப்படும்) பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகியவற்றைத் தர்மம் செய்ய வேண்டும்.
2535. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய பலி ஒட்டகங்களை (அறுத்துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்க என்னை நியமித்தார்கள். மேலும், அவற்றின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகிய அனைத்தையும் தர்மம் செய்யுமாறும், அவற்றில் எதையும் உரிப்பவருக்கான கூலியாகக் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். உரிப்பவருக்குரிய கூலியை நாமே கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் உரிப்பவருக்குரிய கூலி பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 15
2536. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய பலி ஒட்டகங்களை (அறுத்துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மேலும் அவற்றின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகிய அனைத்தையும் ஏழைகளிடையே பங்கிடுமாறும், உரிப்பதற்கான கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 62 பலிப்பிராணியில் கூட்டுச் சேர்வதும், மாடு மற்றும் ஒட்டகம் ஆகிய ஒவ்வொன்றும் ஏழு நபர்களுக்குப் போதுமாகும் என்பதும்.
2537. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2538. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பலிப்பிராணியில் ஏழு பேர் வீதம் ஒட்டகத்திலும் மாட்டிலும் கூட்டுச் சேர்ந்துகொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2539. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றபோது, ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அறுத்துப் பலியிட்டோம்.
அத்தியாயம் : 15
2540. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுச் சேர்த்தோம்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், "இஹ்ராமிற்குப் பிறகு வாங்கப்பட்ட பலிப்பிராணியில் ("அல்ஜஸூர்") கூட்டுச் சேர்ந்துகொள்வதைப் போன்று இஹ்ராமின் போது வாங்கப்பட்ட பலிப்பிராணியில் ("அல்பதனத்") கூட்டுச் சேர்ந்து கொள்ளலாமா?" என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "அதுவும் பலிப்பிராணிகளில் உள்ளதே!" என்று கூறினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கையில் பங்கேற்றார்கள். அவர்கள், "நாங்கள் அன்றைய தினத்தில் எழுபது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டோம். ஓர் ஒட்டகத்தில் தலா ஏழு பேர் கூட்டுச் சேர்ந்துகொண்டோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2541. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஹஜ் பற்றிக் கூறுகையில், "நபி (ஸல்) அவர்கள், நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது பலிப் பிராணியை அறுத்துப் பலியிடுமாறும், பலிப்பிராணியில் ஒரு குழுவினர் கூட்டுச் சேர்ந்துகொள்ளுமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஹஜ்ஜின் இஹ்ராமைக் களைந்துகொள்ளுமாறு மக்களுக்கு உத்தரவிட்டபோதே இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2542. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவிற்கு ("இஹ்ராம்" கட்டி) "தமத்துஉ" செய்தபோது, நாங்கள் ஏழு பேர் கூட்டுச் சேர்ந்து ஒரு மாட்டை அறுத்துப் பலியிட்டோம்.
அத்தியாயம் : 15
2543. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் ஆயிஷா (ரலி) அவர்கள் சார்பாக ஒரு மாட்டை அறுத்துப் பலியிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2544. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) தம் துணைவியர் சார்பாக அறுத்துப் பலியிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தமது ஹஜ்ஜின் போது ஆயிஷா (ரலி) அவர்கள் சார்பாக ஒரு மாட்டை (அறுத்துப் பலியிட்டார்கள்)" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 63 ஒட்டகத்தை நிற்கவைத்து, (அதன் இடப்பக்க முன் காலை மடக்கிக்) கட்டிப்போட்டு அறுத்தல்.
2545. ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்து அறுத்துக் கொண்டிருந்தபோது அவரிடம் சென்று, "இதைக் கிளப்பி (அதன் இடப்பக்க முன் காலை மடக்கிக்) கட்டி, நிற்கவைத்து அறுப்பீராக! அதுவே உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 64 புனித (ஹரம்) எல்லைக்குத் தாமே செல்லும் எண்ணம் இல்லாதவர், ஹரமுக்குப் பலிப்பிராணியை (மற்றவர்களுடன்) அனுப்பிவைப்பது விரும்பத்தக்கதாகும். பலிப்பிராணியின் கழுத்தில் அடையாள மாலை தொங்கவிடுவதும் அதற்காக மாலைகள் தொடுப்பதும் விரும்பத்தக்கதாகும். அவ்வாறு அனுப்பிவைப்பவர் "இஹ்ராம்" கட்டியவராக ஆகமாட்டார்; அதை முன்னிட்டு அவருக்கு எதுவும் தடை செய்யப்பட்டதாகவும் ஆகாது.
2546. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்தே பலிப்பிராணியை அனுப்பி வைப்பார்கள். எனவே, அவர்களது பலிப் பிராணியின் கழுத்தில் (அது பலிப் பிராணி என்பதற்கு அடையாளமாகத்) தொங்கவிடப்படும் மாலையை நான் திரிப்பேன். (பிலிப் பிராணியை அனுப்பிய) பின்னர் "இஹ்ராம்" கட்டியவர் தவிர்த்துக்கொள்ளும் எதையும் அவர்கள் தவிர்த்துக்கொள்ளமாட்டார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2547. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பலிப்பிராணியின் கழுத்தில் தொங்கவிடப்படும் அடையாள மாலையை நான் திரிப்பதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2548. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப்பிராணிக்குக் கழுத்தில் தொங்க விடப்படும் அடையாள மாலையை என்னுடைய இவ்விரு கைகளால் திரித்துள்ளேன். (பலிப் பிராணியை அனுப்பிய) பின்னர் ("இஹ்ராம்" கட்டியவரைப் போன்று தாம்பத்திய உறவு போன்ற) எதிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விலகியிருக்கவுமில்லை; (தைக்கப்பட்ட ஆடை,நறுமணம் போன்ற) எதையும் அவர்கள் கைவிடவுமில்லை.
அத்தியாயம் : 15
2549. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலி ஒட்டகங்களின் அடையாள மாலைகளை நான் என் கைகளாலேயே திரித்தேன். அந்த மாலைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றின் கழுத்தில் போட்டு, அவற்றுக்கு அடையாளச் சின்னமுமிட்டு, இறையில்லம் கஅபாவிற்கு அவற்றை அனுப்பிவைத்தார்கள். அவர்கள் மதீனாவிலேயே தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த எதுவும் ("இஹ்ராம்" கட்டியவரைப் போன்று) தடை செய்யப்பட்டதாக ஆகவில்லை.
அத்தியாயம் : 15
2550. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலிப்பிராணிகளை (வேறொருவர் மூலம்) அனுப்பி வைப்பார்கள். நான் அவற்றுக்கு என் கைகளாலேயே அடையாள மாலைகளைத் திரி(த்துத் தயாரி)ப்பேன். பின்னர் இஹ்ராம் கட்டாதவர் (தமக்குத்) தடுத்துக்கொள்ளாத எதையும் அல்லாஹ்வின் தூதரும் தடுத்துக்கொண்டதில்லை.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2551. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா (ரலி) அவர்கள்) கூறியதாவது:
நான் அந்தப் பலிப் பிராணிகளின் அடையாள மாலைகளை, எங்களிடமிருந்த கம்பளியால் திரித்(துத் தயாரித்)தேன். (பலிப் பிராணிகளை அனுப்பிய பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராமின் நிலையேதும் இல்லாமல் எங்களிடையே (சாதாரணமாகவே) இருந்தார்கள். "இஹ்ராம் கட்டாதவர் தம் துணைவியிடம் மேற்கொள்ளும்" அல்லது "ஆடவர் தம் துணைவியிடம் மேற்கொள்ளும்" அனைத்தையும் மேற்கொண்டார்கள்.
அத்தியாயம் : 15
2552. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப்பிராணியான ஆட்டிற்குரிய அடையாள மாலையைத் திரித்(துத் தயாரித்)தேன். அந்த ஆட்டை (ஹரமிற்கு) அனுப்பிவிட்டு, இஹ்ராமற்ற நிலையிலேயே அவர்கள் எங்களிடையே தங்கியிருந்தார்கள்.
அத்தியாயம் : 15
2553. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப்பிராணிகளுக்கான அடையாள மாலைகளைத் திரித்(துத் தயாரித்)ததுண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றைத் தம் பலிப்பிராணிகளின் கழுத்தில் தொங்கவிட்டு, (ஹரமிற்கு) அனுப்பி வைப்பார்கள். பிறகு "இஹ்ராம்" கட்டியவர் தவிர்த்துக் கொள்ளும் எதையும் தவிர்த்துக் கொள்ளாதவர்களாக (எங்களிடையே) அவர்கள் தங்கியிருப்பார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15