பாடம் : 19 நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்.
2334. முஹம்மத் பின் அலீ பின் அல் ஹுசைன் பின் அலீ பின் அபீதாலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு முறை) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஜாபிர் (ரலி) அவர்கள் (என்னுடன் வந்த) மக்களைப் பற்றி விசாரித்துவிட்டு இறுதியில் என்னைப் பற்றி விசாரித்தார்கள். "நான் ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்களின் பேரன் முஹம்மத் பின் அலீ" என்று (என்னை) அறிமுகப்படுத்தினேன். உடனே ஜாபிர் (ரலி) அவர்கள், (அன்பொழுகத்) தமது கையை எனது தலையை நோக்கி நீட்டி, (பிறகு கையைக் கீழே கொண்டு சென்று) எனது அங்கியின் மேல் பொத்தானையும்,அடுத்து கீழ்ப் பொத்தானையும் கழற்றி, எனது நெஞ்சில் கையை வைத்தார்கள். -அப்போது நான் இளவயதுச் சிறுவனாக இருந்தேன்- மேலும், "என் சகோதரர் மகனே, வருக. நீர் விரும்பியதைப் பற்றி என்னிடம் கேள்" என்றார்கள். அவர்களிடம் சில விளக்கங்களைக் கேட்டேன். -அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் கண்பார்வையற்றவராய் இருந்தார்கள்.- தொழுகை நேரம் வந்ததும் அவர்கள் தமது மேல் துண்டை போர்த்திக்கொண்டு எழுந்தார்கள். அவர்கள் அதைத் தமது தோள்மீது போடப் போட, அது சிறியதாக இருந்ததால் தோளில் உட்காராமல் அதன் இரு ஓரங்களும் கீழே விழுந்துகொண்டிருந்தன. அப்போது அவர்களது மேல்சட்டை அருகிலிருந்த ஒரு கொக்கியில் மாட்டப்பெற்றிருந்தது. பிறகு அவர்கள் (மேல்சட்டை அணியாமலேயே மேல்துண்டுடன்) எங்களுக்குத் தொழுவித்தார்கள்.
பிறகு அவர்களிடம் நான், "அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒன்பது" எனத் தமது விரலால் சைகை செய்து காட்டிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்குச் சென்ற பின்) "ஒன்பது" ஆண்டுகள் ஹஜ் (கடமையாகததால் அதை) நிறைவேற்றாமலேயே தங்கியிருந்தார்கள். பத்தாவது ஆண்டில் மக்களிடையே "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஆண்டில்) ஹஜ் செய்யப்போகிறார்கள்" என அறிவிப்புச் செய்யவைத்தார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்களைப் போன்றே தாமும் (ஹஜ்) கிரியைகளைச் செய்யும் நோக்கத்துடன் ஏராளமான மக்கள் மதீனாவிற்கு(த் திரண்டு) வந்தனர்.
பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். "துல்ஹுலைஃபா" எனும் இடத்திற்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது, (அபூபக்ர் (ரலி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களுக்கு முஹம்மத் பின் அபீபக்ர் (ரலி) பிறந்தார். உடனே அஸ்மா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அபூபக்ர் (ரலி) அவர்களை) அனுப்பி "நான் எப்படி ("இஹ்ராம்") கட்ட வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ குளித்துவிட்டு, (பிரசவப்போக்கு இருப்பதால்) ஒரு துணியால் கச்சை கட்டிக்கொண்டு, "இஹ்ராம்" கட்டிக்கொள்" என்று கூறியனுப்பினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த (துல்ஹுலைஃபா) பள்ளிவாசலில் தொழுதுவிட்டு, "கஸ்வா" எனும் ஒட்டகத்தில் ஏறினார்கள். (துல்ஹுலைஃபாவிற்கு அருகிலுள்ள) "அல்பைதாஉ" எனுமிடத்தில் அவர்களது ஒட்டகம் நிலைக்கு வந்து பயணத்திற்குத் தயாரானபோது நான் பார்த்தேன்; எனது பார்வையெட்டும் தூரத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னாலும், வலப் பக்கத்திலும், இடப் பக்கத்திலும், பின்னாலும் (ஏராளமான) மக்கள் வாகனத்திலும் கால்நடையாகவும் வந்து குழுமியிருப்பதைக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு நடுவில் இருந்தார்கள். அப்போது அவர்களுக்குக் குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்றன. அவற்றின் விளக்கத்தை அவர்கள் அறிவார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அதை நாங்களும் அப்படியே செய்தோம்.
அவர்கள் "லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் (இதோ, உன் அழைப்பேற்று வந்துவிட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகி றேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவருமில்லை)" என்று ஏகத்துவ உறுதிமொழியுடன் தல்பியாச் சொன்னார்கள். மக்கள், தாம் கூறிவருகின்ற முறையில் (சற்று கூடுதல் குறைவு வாசகங்களுடன்) தல்பியா கூறினர். ஆனால், அதில் எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து தமது தல்பியாவையே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது நாங்கள் ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் எண்ணியிருக்கவில்லை. (ஹஜ் காலத்தில் செய்யும்) அந்த உம்ராவை நாங்கள் அறிந்திருக்கவுமில்லை. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் "ஹஜருல் அஸ்வத்" உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். (தம் தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாக மூன்று முறையும், (சாதாரணமாக) நடந்தவாறு நான்கு முறையும் சுற்றிவந்தார்கள்.
பிறகு மகாமு இப்ராஹீமை முன்னோக்கிச் சென்று, "இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்" (2:125) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அப்போது மகாமு இப்ராஹீம் தமக்கும் கஅபாவிற்கும் இடையே இருக்குமாறு நின்று, இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். குல் ஹுவல்லாஹு அஹத், குல் யாஅய்யுஹல் காஃபிரூன் ஆகிய இரு அத்தியாயங்களை அவ்விரு ரக்அத்களிலும் ஓதினார்கள்.
- இவ்விரு அத்தியாயங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் ஓதினார்கள் என்றே ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து என் தந்தை முஹம்மத் பின் அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என நான் அறிவேன் என்று அறிவிப்பாளர் ஜஅஃபர் பின் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜருல் அஸ்வத்" அமைந்துள்ள மூலைக்குத் திரும்பிச் சென்று, அதில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். பின்னர் (அருகிலிருந்த) அந்த (ஸஃபா) வாசல் வழியாக "ஸஃபா" மலைக் குன்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஸஃபாவை நெருங்கியதும் "ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்" எனும் (2:158ஆவது) வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, "அல்லாஹ் ஆரம்பமாகக் குறிப்பிட்டுள்ள இடத்திலிருந்தே நானும் ஆரம்பிக்கிறேன்" என்று சொன்னார்கள். அவ்வாறே, முதலில் "ஸஃபா" மலைக் குன்றை நோக்கிச் சென்று, அதன் மீது ஏறினார்கள். அப்போது அவர்களுக்கு இறையில்லம் கஅபா தென்பட்டது. உடனே "லாயிலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என ஓரிறை உறுதிமொழியும் தக்பீரும் சொன்னார்கள்.
மேலும், லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஅதஹு, வ நஸர அப்தஹு. வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத் தவன். (அந்த) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டணிக்குலங்கள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டான்)"என்றும் கூறினார்கள்.
பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (ஓடு பாதையில்) பிரார்த்தித்துவிட்டு, மேற்கண்டவாறு மூன்று முறை கூறினார்கள்.
பிறகு மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப்பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப்பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள்.
மர்வாவில் அவர்கள் தமது இறுதிச் சுற்றை முடித்ததும், "நான் (ஹஜ்ஜுடைய) மாதத்தில் உம்ராச் செய்யலாம் எனப்) பின்னர் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், நான் பலிப்பிராணிகளை என்னுடன் கொண்டுவந்திருக்கமாட்டேன்; இதை உம்ராவாக மாற்றியிருப்பேன். எனவே, பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, தமது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளட்டும்!" என்று சொன்னார்கள்.
அப்போது சுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் (ரலி) அவர்கள் எழுந்து(வந்து), "அல்லாஹ்வின் தூதரே! இ(ச்சலுகையான)து, இந்த ஆண்டிற்கு மட்டுமா, அல்லது என்றைக்குமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விரல்களில் ஒன்றை மற்றொன்றுடன் கோத்துக்கொண்டு, "ஹஜ்ஜுக்குள் உம்ரா நுழைந்து கொண்டது" என்று இரண்டு முறை கூறினார்கள். பிறகு (சுராக்கா (ரலி) அவர்களுக்கு), "இல்லை; என்றைக்கும் தான் (இச்சலுகை); என்றைக்கும் தான் (இச்சலுகை)" என்று விடையளித்தார்கள்.
(அந்த ஹஜ்ஜின்போது) அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்காகக் குர்பானி ஒட்டகங்களுடன் வந்தார்கள். அப்போது (அலீயின் துணைவி யார்) ஃபாத்திமா (ரலி) அவர்கள், சாயமிடப்பட்ட ஆடையணிந்து, கண்களுக்கு அஞ்சனம் தீட்டி இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பவர்களில் ஒருவராகக் காட்சியளித்தார்கள். அதை அலீ (ரலி) அவர்கள் ஆட்சேபித்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள், "என் தந்தை (நபி) அவர்கள்தாம் இப்படிச் செய்யுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்" என்றார்கள்.
- அலீ (ரலி) அவர்கள் இராக்கிலிருந்தபோது (இதைப் பின்வருமாறு) குறிப்பிடுவார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா செய்தது குறித்துப் புகார் செய்வதற்காகவும், ஃபாத்திமா கூறியபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் அவ்வாறு செய்யச் சொன்னார்களா என்று கேட்டறிவதற்காகவும் சென்றேன். ஃபாத்திமாமீது ஆட்சேபம் செய்ததை,அவர்களிடம் தெரிவித்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனது குற்றச்சாட்டைக் கேட்டுவிட்டு), "அவர் (ஃபாத்திமா) சொன்னது உண்மையே; அவர் சொன்னது உண்மையே" என்றார்கள்.
பிறகு, "நீர் இஹ்ராம் கட்டி, ஹஜ் செய்ய முடிவு செய்தபோது என்ன (தல்பியா) சொன்னீர்?" என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "இறைவா! உன் தூதர் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளார்களோ அதற்காகவே நானும் "இஹ்ராம்" கட்டினேன்"என்று (தல்பியா) சொன்னேன் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என்னுடன் பலிப்பிராணிகள் உள்ளன. எனவே, ("என்னைப் போன்றே" எனக்கூறி நீரும் இஹ்ராம் கட்டியுள்ளதால்) நீர் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டாம்"என்றார்கள்.-
தொடர்ந்து முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அலீ (ரலி) அவர்கள் யமனிலிருந்து கொண்டுவந்த பலிப்பிராணிகளையும் நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) கொண்டுவந்த பலிப் பிராணிகளையும் சேர்த்து மொத்தம் நூறு பலிப் பிராணிகள் சேர்ந்தன.
பிறகு மக்கள் அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, தலைமுடியைக் குறைத்துக் கொண்டனர்; நபி (ஸல்) அவர்களையும்,தம்முடன் பலிப்பிராணிகளைக் கொண்டுவந்திருந்த மக்களையும் தவிர! துல்ஹஜ் எட்டாவது நாள் வந்தபோது, மக்கள் மினாவை நோக்கிச் சென்றனர். அப்போது ஹஜ்ஜுக்காக (இஹ்ராம் கட்டி) "தல்பியா" கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிச்சென்று (மினாவில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள். பிறகு (அரஃபா அருகிலுள்ள) "நமிரா" எனுமிடத்தில் தமக்காக முடியினாலான கூடாரம் ஒன்று அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்கள் (முஸ்தலிஃபாவிலுள்ள) "மஷ்அருல் ஹராம்" எனும் மேட்டுக்கு அருகில் தங்குவார்கள் எனக் குறைஷியர் பெரிதும் நம்பிக்கொண்டிருந்தனர். அறியாமைக் காலத்தில் குறைஷியர் அங்கு தங்குவது வழக்கம். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கடந்து அரஃபாவிற்குச் சென்றுவிட்டார்கள். அங்கு "நமிரா"வில் தமக்காக அமைக்கப்பெற்றிருந்த கூடாரத்தைக் கண்டு அங்கு இறங்கித் தங்கினார்கள்.
சூரியன் உச்சி சாய்ந்ததும் "கஸ்வா" எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் ("உரனா") பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்:
"உங்களது புனிதமிக்க இந்நகரத்தில் உங்களது புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். அறிக! அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவை ஆகும். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்துவிட்ட உயிர்க்கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக் கீழே) புதைக்கப்பட்டவை ஆகும். (அவற்றை நான் தள்ளுபடி செய்கிறேன்.) முதற்கட்டமாக, நம்மிடையே நடைபெற்ற கொலைகளில் ரபீஆ பின் அல்ஹாரிஸின் மகனது கொலைக்கான பழிவாங்கலை நான் தள்ளுபடி செய்கிறேன். அவன் பனூ சஅத் குலத்தாரிடையே பால்குடிப் பாலகனாக இருந்துவந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்றுவிட்டனர். அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்படுகிறது. (அவற்றையும் நான் தள்ளுபடி செய்கிறேன்.) நம்மவர் கொடுத்திருந்த வட்டிகளில் முதற்கட்டமாக (என் பெரிய தந்தை) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபிற்கு வரவேண்டிய வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அதில் (அசலைத் தவிர) கூடுதலான தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்) பிடித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள். அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால், நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் விரிப்பில் (அதாவது உங்களது வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு அவர்கள் அனுமதித்தால் காயம் ஏற்படாதவகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம். உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில்,முறையான உணவும் உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும்.
உங்களிடையே நான் (மிக முக்கியமான) ஒன்றை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பலமாகப் பற்றிக்கொண்டால் நீங்கள் ஒருபோதும் வழிதவறவேமாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்" என்று கூறிவிட்டு, "(மறுமை நாளில்) உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (இறைச்செய்திகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்துவிட்டீர்கள்; (உங்களது நபித்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்தார்மீது) அக்கறையுடன் நடந்துகொண்டீர்கள் என நாங்கள் சாட்சியமளிப்போம்" என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சுட்டுவிரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு அதை மக்களை நோக்கித் தாழ்த்தி, "இறைவா! இதற்கு நீயே சாட்சி" என்று மூன்று முறை கூறினார்கள்.
பிறகு தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச்செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச்செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த ("ஜபலுர் ரஹ்மத்" மலை அடிவாரத்தில்) பாறைகள்மீது தமது "கஸ்வா" எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக நடந்துவந்த மக்கள் திரளை தம் முன்னிறுத்தி, கிப்லாவை முன்னோக்கி, சூரியன் மறையத் தொடங்கும்வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்.
சூரியனின் பொன்னிறம் சற்று மறைந்து சூரியனின் தலைப்பகுதி மறைந்துவிட்ட பிறகு உசாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) அமர்த்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். "கஸ்வா" எனும் தமது ஒட்டகத்தின் கடிவாளத்தை அவர்கள் இறுக்க, அதன் தலை, (பயணி களைப்படையும்போது) கால் வைக்கும் வளையத்தில் பட்டது. அப்போது தமது வலக் கையால் சைகை செய்து, "மக்களே! நிதானம்! நிதானம்! (மெதுவாகச் செல்லுங்கள்)" என்றார்கள். ஒவ்வொரு மணல் மேட்டையும் அடையும் போது, ஒட்டகம் மேட்டில் ஏறும்வரை கடிவாளத்தைச் சற்றுத் தளர்த்தினார்கள். இவ்வாறு முஸ்தலிஃபாவிற்கு வந்ததும் அங்கு ஒரேயொரு "தொழுகை அறிவிப்பு"ம் இரு இகாமத்களும் சொல்லி மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருக்களித்துப் படுத்திருந்துவிட்டு, ஃபஜ்ர் உதயமானதும் தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லி ஃபஜ்ர் தொழுவித்தார்கள். அப்போது அதிகாலை வெளிச்சம் நன்கு புலப்பட்டது. பிறகு "கஸ்வா" ஒட்டகத்தில் ஏறி, மஷ்அருல் ஹராமிற்கு ("குஸஹ்" மலைக்கு) வந்து, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் மிகப்பெரியவன் என்று (தக்பீரு)ம், லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று (தஹ்லீலு)ம், "அவன் தனித்தவன்" என்று (ஓரிறை உறுதிமொழியு)ம் கூறினார்கள். நன்கு விடியும்வரை அங்கேயே தங்கியிருந்தார்கள்.
பிறகு சூரியன் உதயமாவதற்கு முன் அங்கிருந்து புறப்பட்டார்கள். அப்போது ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக்கொண்டு சென்றார்கள். -ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அழகிய முடியும் தோற்றமும் வெள்ளை நிறமும் உடைய வசீகரமான ஆண் மகனாக இருந்தார்கள்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டபோது,அவர்களைக் கடந்து பெண்கள் சிலர் சென்றனர். ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்களைக் கூர்ந்து பார்க்கலானார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தின் மீது தமது கையை வைத்(து மறைத்)தார்கள். உடனே ஃபள்ல் (ரலி) அவர்கள் தமது முகத்தை வேறு பக்கம் திருப்பி (அப்பெண்களை)ப் பார்க்கலானார்கள். மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை மறு பக்கமும் கொண்டுசென்று, ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தின் மீது வைத்து, அப்பெண்களைப் பார்க்கவிடாமல் திருப்பினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்தலிஃபாவிற்கும் மினாவிற்கும் இடை யிலுள்ள) "பத்னு முஹஸ்ஸிர்" எனும் இடத்துக்கு வந்தபோது, தமது ஒட்டகத்தைச் சிறிது விரைவாகச் செலுத்தினார்கள். பின்னர் "ஜம்ரத்துல் அகபா" செல்லும் சாலையின் நடுவில் பயணம் செய்து, அந்த மரத்திற்கு அருகிலுள்ள "ஜம்ரத்துல் அகபா"விற்குச் சென்று, சுண்டி எறியும் அளவிற்கு ஏழு சிறு கற்களை ஜம்ராவின் மீது எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும்போது தக்பீர் கூறினார்கள். அந்தப் பள்ளத்தாக்கின் நடுவே நின்று கற்களை எறிந்தார்கள்.
பின்னர் மினாவிலுள்ள பலியிடும் இடத்திற்குச் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு எஞ்சிய (முப்பத்தேழு) ஒட்டகங்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச்செய்)தார்கள். தமது பலி ஒட்டகங்களிலும் அலீ (ரலி) அவர்களை நபியவர்கள் கூட்டாக்கிக்கொண்டார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அறுக்கப்பட்ட ஒவ்வோர் ஒட்டகத்திலிருந்தும் ஓர் இறைச்சித் துண்டு கொண்டுவரப்பட்டு, ஒரு பாத்திரத்திலிட்டுச் சமைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் அதன் இறைச்சியை உண்டார்கள்; குழம்பைப் பருகினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறி, ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்காக) இறையில்லம் கஅபாவை நோக்கிச் சென்றார்கள். மக்காவிலேயே லுஹ்ர் தொழுதுவிட்டு, அப்துல் முத்தலிப் மக்களிடம் சென்றார்கள். அப்போது அம்மக்கள் "ஸம்ஸம்" கிணற்றிலிருந்து நீரிறைத்து விநியோகித்துக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அப்துல் முத்தலிபின் மக்களே! நீரிறைத்து விநியோகியுங்கள். "ஸம்ஸம்" கிணற்றில் நீரிறை(த்து விநியோகிக்கும் பொறு)ப்பில் உங்களை மக்கள் மிகைத்து விடுவார்கள் என்று (அச்சம்) இல்லாவிட்டால், உங்களுடன் நானும் நீரிறைப்பேன்" என்று சொன்னார்கள்.அப்போது அவர்கள் ஒரு வாளித் தண்ணீரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து சிறிது நீரைப் பருகினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2335. மேற்கண்ட ஹதீஸ் முஹம்மத் பின் அலீ பின் அல்ஹுசைன் பின் அலீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் பற்றிக் கேட்டேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் அதில், "(அறியாமைக் காலத்தில்) அபூ சய்யாரா என்பவர் தமது சேணம் பூட்டப்படாத கழுதையில் அரபியரை (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு) அழைத்துச் செல்பவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மஷ் அருல் ஹராமை"த் தாண்டிச் சென்றபோது, அந்த இடத்தோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தைச் சுருக்கிக்கொள்வார்கள்; அதுதான் அவர்கள் தங்கும் இடமாக அமையும் என்பதில் அவர்கள் உறுதியோடு இருந்தனர். ஆனால்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(ங்கு தங்குவ) தற்கு முன்வரவில்லை. நேராக அரஃபா நோக்கிச் சென்று (அதன் அருகிலுள்ள "நமிரா"வில்தான்) தங்கினார்கள்" என்று அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 20 "அரஃபா" பெருவெளி முழுவதும் தங்குமிடம்தான் என்பது தொடர்பாக வந்துள்ளவை.
2336. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மினாவில் மஸ்ஜிதுல் கைஃப் அருகிலுள்ள) இவ்விடத்தில் அறுத்துப் பலியிட்டேன். ஆனால், மினா முழுவதும் பலியிடும் இடமாகும். எனவே, (மினாவில்) நீங்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே பலியிட்டுக்கொள்ளுங்கள். நான் (அரஃபா நடுவிலுள்ள "ஜபலுர் ரஹ்மத்" மலைக்குக் கீழே) தங்கினேன். ஆனால், அரஃபா முழுவதும் தங்குமிடமாகும். நான் (முஸ்தலிஃபாவில் "மஷ்அருல் ஹராம்" குன்றின் அருகில்) தங்கினேன். ஆனால், முஸ்தலிஃபா முழுவதும் தங்குமிடமாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2337. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா(விலுள்ள கஅபா)விற்கு வந்ததும் "ஹஜருல் அஸ்வது"க்குச் சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பின்னர் வலப் புறமாக நடந்துசென்று (கஅபாவைச்) சுற்றலானார்கள். மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாகவும் நான்கு சுற்றுகள் சாதாரணமாக நடந்தும் சுற்றினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 21 அரஃபா பெருவெளியில் தங்குவதும், "பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்" (2:199) எனும் இறைவசனத் தொடரும்.
2338. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின்போது) குறைஷியரும் அவர்களுடைய சமயச் சார்புடையோரும் (தங்களை உயர்வாகக் கருதிக்கொண்டு) முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள் ("ஹரம்" புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்). அவர்கள் "கடினமான (சமயப் பற்றுடைய)வர்கள்" (ஹும்ஸ்) எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற எல்லா அரபியரும் "அரஃபா"பெருவெளியில் தங்குவார்கள். இஸ்லாம் வந்தபோது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், (குறைஷிக் குலத்தவரான) தன் தூதருக்கு (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) "அரஃபாத்" சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு, அங்கிருந்தே புறப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டான். அக்கட்டளையே "பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்" (2:199) எனும் இறைவசனமாகும்.
அத்தியாயம் : 15
2339. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின்போது) அரபுகள் இறையில்லம் கஅபாவை நிர்வாணமாகவே சுற்றிவருவார்கள். "ஹும்ஸ்" (கடினமான சமயப் பற்றுடையவர்)களைத் தவிர! "ஹும்ஸ்" என்போர் குறைஷியரும் அவர்கள் பெற்றெடுத்த மக்களும் ஆவர். அரபுகள் நிர்வாணமாகவே (கஅபாவைச்) சுற்றிவருவார்கள். ஹும்ஸ்கள் ஏதேனும் ஆடை வழங்கினால் தவிர! ஆண்கள் ஆண்களுக்கும், பெண்கள் பெண்களுக்கும் ஆடை வழங்குவதுண்டு. கடினமான சமயப்பற்றுடைய ஹும்ஸ்கள் (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) முஸ்தலிஃபாவிலிருந்து வெளியேறமாட்டார்கள். மற்ற அரபுகள் அனைவரும் அரஃபாத் சென்றடை(ந்து அங்கு தங்கு)வார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஹும்ஸ்களைப் பற்றியே வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் "பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்" என்று கூறுகின்றான். (அரபு) மக்கள் அனைவரும் அரஃபாவிலிருந்தே திரும்பிச்செல்வார்கள். ஹும்ஸ்கள் மட்டும் முஸ்தலிஃபாவிலிருந்து திரும்பிச்செல்வார்கள். அவர்கள், "நாங்கள் "ஹரம்" (புனித) எல்லையிலிருந்தே திரும்பிச்செல்வோம்" என்று கூறுவார்கள். பின்னர் இந்த வசனம் (2:199) அருளப் பெற்றதும் அரஃபாத்திலிருந்தே அவர்களும் திரும்பிச்சென்றனர்.
அத்தியாயம் : 15
2340. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒரு முறை) எனது ஒட்டகம் ஒன்றைத் தொலைத்து விட்டேன். அரஃபா நாளன்று நான் எனது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அரஃபா" பெருவெளியில் மக்களுடன் தங்கியிருப்பதைக் கண்டேன். அப்போது நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் (முஸ்தலிஃபாவில் தங்கும்) "ஹும்ஸ்"களில் ஒருவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?" என்று சொல்லிக் கொண்டேன். குறைஷியர் கடினமான சமயப் பற்றுடையவர் (ஹும்ஸ்)களாகவே கருதப்பட்டனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 22 (மற்றொருவரின் இஹ்ராமுடன்) சம்பந்தப்படுத்தி இஹ்ராம் கட்டுவது செல்லும்.
2341. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (யமன் நாட்டிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் (துல்ஹுலைஃபாவில்) "அல்பத்ஹா" பள்ளத்தாக்கில் தங்கியிருந்தார்கள். அவர்கள் என்னிடம், "ஹஜ் செய்வதற்காகவா வந்துள்ளீர்?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "நீர் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளீர்?" என்று கேட்டார்கள். நான், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளார்களோ அதற்காகவே நானும் "இஹ்ராம்" கட்டியுள்ளேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்றே செய்தீர். நீர் (சென்று) இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப் செய்து), ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றி (தொங்கோட்டம் ஓடி)விட்டு, இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்க" என்றார்கள்.
அவ்வாறே நான் (சென்று) இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் சுற்றி விட்டுப் பின்னர் பனூ கைஸ் குலத்தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவினரான) ஒரு பெண்ணிடம் சென்றேன். அவர் எனது தலையில் பேன் பார்த்து விட்டார். பின்னர் (துல்ஹஜ் எட்டாவது நாளில்) நான் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி தல்பியாச் சொன்னேன். இவ்வாறே (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளலாம் என்றே) நான் மக்களுக்குத் தீர்ப்பும் வழங்கிவந்தேன். உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது என்னிடம் ஒரு மனிதர், "அபூமூசா!" அல்லது "அப்துல்லாஹ் பின் கைஸ்!" உங்களது ஒரு தீர்ப்பை நிறுத்திவையுங்கள். ஏனெனில், உங்களுக்குப் பின்னர் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா) ஹஜ்ஜின் கிரியைகளில் செய்துள்ள மாற்றத்தை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறினார். அதன் பின்னர் நான், "மக்களே! நாம் யாருக்கேனும் மார்க்கத் தீர்ப்பு ஏதேனும் வழங்கியிருந்தால் (அதை உடனடியாக செயல்படுத்திவிடாமல்) அவர் எதிர்பார்த்திருக்கட்டும். ஏனெனில், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வருவார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்" என்று கூறினேன். உமர் (ரலி) அவர்கள் வந்ததும் அவர்களிடம் நான் நடந்ததைச் சொன்னேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் வேதம் ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்கும்படி கட்டளையிடுகிறது. நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலிப்பிராணி தனது இடத்தை அடையாத வரை (அதாவது குர்பானி கொடுக்காத வரை) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2342. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்பத்ஹா" பள்ளத்தாக்கில் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் வந்தேன். அவர்கள் என்னிடம், "நீர் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளீர்?" என்று கேட்டார்கள். நான், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக "இஹ்ராம்"கட்டியுள்ளார்களோ அதற்காகவே "இஹ்ராம்" கட்டியுள்ளேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்துள்ளீரா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். "அவ்வாறாயின் நீர் இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றிவந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்வீராக"என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நான் இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றி விட்டுப் பின்னர் என் கூட்டத்தைச் சேர்ந்த (நெருங்கிய உறவுக்காரப்) பெண் ஒருவரிடம் சென்றேன். அவர் எனக்குத் தலை கழுவி, தலை வாரிவிட்டார்.
நான் இவ்வாறே (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளலாம் என்றே) அபூபக்ர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சி யி(ன் ஆரம்பக் காலத்தி)லும் மக்களுக்குத் தீர்ப்பளித்துவந்தேன். நான் ஹஜ் காலத்தில் ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தபோது என்னிடம் ஒரு மனிதர் வந்து, "இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர்) ஹஜ்ஜின் கிரியைகளில் ஏற்படுத்திய புதிய நடைமுறையை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று சொன்னார். உடனே நான் "மக்களே! நாம் யாருக்கேனும் ஏதேனும் மார்க்கத் தீர்ப்பு அளித்திருந்தால் அவர்கள் (அதைச் செயல்படுத்திவிடாமல்) நிறுத்தி வைக்கட்டும்! இதோ! இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வரப்போகிறார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்" என்று கூறினேன். உமர் (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களிடம் நான், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஹஜ்ஜின் கிரியைகளில் நீங்கள் ஏற்படுத்திய இந்த நடைமுறை என்ன?" என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயல்படுவதெனில், வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் "அல்லாஹ்விற்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்குங்கள்" (2:196) என்று கூறுகின்றான். நாம் நம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயல்படுவதெனில், நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணிகளைப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2343. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பணி நிமித்தம்) என்னை யமன் நாட்டுக்கு அனுப்பியிருந்தார்கள். நான் அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் அவர்களிடம் சரியாக வந்து சேர்ந்தேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூமூசா! நீர் "இஹ்ராம்" கட்டியபோது எவ்வாறு (தல்பியா) சொன்னீர்?" என்று கேட்டார்கள். நான், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளார்களோ அதற்காகவே நான் "இஹ்ராம்" கட்டுகிறேன்" என்று கூறினேன் என்றேன். அதற்கு அவர்கள், "நீர் (உம்முடன்) ஏதேனும் பலிப் பிராணி கொண்டுவந்துள்ளீரா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். "அவ்வாறாயின், நீர் சென்று இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றி வந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்க" என்றார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2344. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(ஹஜ் பருவத்தில் உம்ராவிற்கு இஹ்ராம் கட்டி, அதை நிறைவேற்றிவிட்டுப் பிறகு துல்ஹஜ் எட்டாவது நாள் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிப் பயனடையும் முறையான) "தமத்துஉ" செல்லும்" என நான் மார்க்கத் தீர்ப்பு வழங்கிவந்தேன். இந்நிலையில் என்னிடம் ஒரு மனிதர் (வந்து), "நீங்கள் உங்களது தீர்ப்பொன்றை நிறுத்திவையுங்கள். இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர் -ரலி) அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகள் விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தியுள்ளதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறினார். நான் பின்னால் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஹஜ் பருவத்தில் உம்ராச் செய்துள்ளனர் என நான் அறிந்துள்ளேன். ஆயினும்,ஹாஜிகள் தம் துணைவியருடன் (அரஃபாவில் உள்ள) "அராக்" பகுதியில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு (குளித்து)விட்டு, தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க (அரஃபா நோக்கிச்) செல்வதை நான் வெறுத்தேன் (ஆகவேதான், ஹஜ் பருவத்தில் உம்ராச் செய்ய வேண்டாம் என நான் ஆணையிட்டேன்)" என்றார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 23 "தமத்துஉ" முறை ஹஜ் செல்லும்.
2345. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் "தமத்துஉ" செய்ய வேண்டாம் எனத் தடை விதித்துவந்தார்கள். (இதற்கு மாறாக) அலீ (ரலி) அவர்கள் "தமத்துஉ" செய்யுமாறு உத்தரவிட்டுவந்தார்கள். இதையொட்டி உஸ்மான் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் ஏதோ சொன்னார்கள். பின்னர் அலீ (ரலி) அவர்கள், "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "தமத்துஉ" செய்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் (தாமே!)" என்றார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், "ஆம்; ஆயினும் அப்போது நாம் அஞ்சியவர்களாகத்தாமே இருந்தோம்!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2346. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மக்கா செல்லும் வழியில்) "உஸ்ஃபான்" எனுமிடத்தில் அலீ (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் சந்தித்துக்கொண்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் "தமத்துஉ" செய்வதற்கு, அல்லது (ஹஜ் பருவத்தில்) உம்ராச் செய்வதற்குத் தடை விதித்துவந்தார்கள். எனவே, அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஒரு செயலில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? அதற்கு நீங்கள் தடை விதிக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், "(இந்த முடிவில்) நீங்கள் எம்மை விட்டுவிடுங்கள்!" என்று கூற, அதற்கு அலீ (ரலி) அவர்கள் "என்னால் உங்களை விட்டுவிட முடியாது" என்று சொன்னார்கள். தமது நிலையில் உஸ்மான் (ரலி) அவர்கள் (உறுதியாக) இருப்பதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள் ஹஜ்,உம்ரா ஆகிய இரண்டிற்கும் (கிரான்) சேர்த்து (இஹ்ராம் கட்டி) தல்பியாச் சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2347. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தமத்துஉ" முறையில் ஹஜ் செய்வதானது, முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2348. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அது -அதாவது ஹஜ் காலத்தில் "தமத்துஉ" செய்வது- (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.
அத்தியாயம் : 15
2349. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தவணை முறைத் திருமணம் (முத்ஆ), ஹஜ் காலத்தில் "தமத்துஉ" செய்வது ஆகிய இரு "முத்ஆ"க்களும் (நபித்தோழர்களாகிய) எங்களைத் தவிர வேறெவருக்கும் பொருந்தாது.
அத்தியாயம் : 15
2350. அப்துர் ரஹ்மான் பின் அபிஷ்ஷஅஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) ஆகியோரிடம் சென்று, "நான் இவ்வருடம் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்ய (தமத்துஉ) முடிவு செய்துள்ளேன்" என்றேன்.
அதற்கு இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், "ஆனால், உங்கள் தந்தை (அபுஷ் ஷஅஸா) அவர்கள் இவ்வாறு (தமத்துஉ செய்ய) முடிவு செய்பவராக இருக்கவில்லை" என்றார்கள்.
இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
என் தந்தை யஸீத் பின் ஷரீக் (ரஹ்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) "அர்ரபதா" எனும் இடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்துசென்றார்கள். அப்போது அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம் இதை (தமத்துஉ) பற்றி வினவியபோது அபூதர் (ரலி) அவர்கள், "தமத்துஉ செய்வது, (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது. அது உங்களுக்கு உரியதன்று"என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2351. ஃகுனைம் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் "தமத்துஉ" முறையைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (நபித்தோழர்களாகிய) நாங்கள் அவ்வாறு செய்துள்ளோம். இதோ இவர் (முஆவியா) அன்றைய நாளில் "உருஷில்" அதாவது மக்காவில் இறைமறுப்பாளராக இருந்தார்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இதோ இவர் -அதாவது முஆவியா (ரலி) அவர்கள்" என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஹஜ் காலத்தில் உம்ராச் செய்வது (தமத்துஉ)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2352. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், "நான் இன்றைய தினம் உமக்கு ஒரு ஹதீஸை அறிவிக்கப்போகிறேன்;அதன் மூலம் உமக்கு அல்லாஹ் இதற்குப் பின்னாலும் பயனளிப்பான். அறிந்துகொள்க: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரில் சிலரை, (ஹஜ் மாதத்தின்) பத்தாவது நாளில் உம்ராவிற்கு இஹ்ராம் கட்ட அனுமதித்தார்கள். இந்த நடைமுறையை மாற்றக்கூடிய எந்த இறைவசனமும் அருளப் பெறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யாமலேயே இறந்தும்விட்டார்கள். பின்னர் ஒவ்வொரு மனிதரும் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினர்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2353. மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பின்னர் ஒரு மனிதர் (அதாவது உமர் (ரலி) அவர்கள்) தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15