பாடம் : 11 "இஹ்ராம்" கட்டியவர் குருதி உறிஞ்சி எடுப்பது செல்லும்.
2274. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்த நிலையில் (தமக்கேற்பட்டிருந்த ஒற்றைத் தலைவலியின் காரணத்தால்) குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2275. அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் தமது தலையின் நடுவே குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். அப்போது அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 12 "இஹ்ராம்" கட்டியவர் தம் கண்களுக்கு மருந்திடலாம்.
2276. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு பயணத்தில்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் "அல்மலல்" எனுமிடத்தை அடைந்த போது, (எங்களுடன் வந்த) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டது. பின்னர் நாங்கள் "அர்ரவ்ஹா" எனுமிடத்தில் இருந்தபோது, அவருக்குக் கண் வலி கடுமையாகிவிட்டது. உடனே உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி)க் கேட்டார். அதற்கு அபான் (ரஹ்) அவர்கள், அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு கூறியனுப்பினார்கள். மேலும், "(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) "இஹ்ராம்" கட்டியிருந்த ஒருவருக்குக் கண்வலி ஏற்பட்டபோது,இவ்வாறுதான் அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2277. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டது. அப்போது அவர்கள் கண்ணில் அஞ்சனம் (சுருமா) இட்டுக்கொள்ள விரும்பினார்கள். இதை அறிந்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தடை விதித்துவிட்டு, கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அவருக்கு உத்தர விட்டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் (கண்வலி எற்பட்டோருக்கு) அவ்வாறு செய் தார்கள் என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றும் அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 13 "இஹ்ராம்" கட்டியவர் தம் உடலையும் தலையையும் கழுவலாம்.
2278. அப்துல்லாஹ் பின் ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்அப்வா" எனுமிடத்தில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகிய இருவரும் (ஒரு விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டனர். அதாவது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் தமது தலையைக் கழுவலாம்" என்று கூறினார்கள். மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவக் கூடாது"என்றார்கள்.
இதையடுத்து அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அதைப் பற்றிக் கேட்பதற்காக அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பிவைத்தார்கள். நான் சென்றபோது அவர்கள் கிணற்றின் மேல் ஊன்றப்பட்டிருக்கும் இரு மரக்குச்சிகளுக்கிடையே ஒரு துணியால் திரையிட்டுக் குளித்துக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினேன். அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். "நான் அப்துல்லாஹ் பின் ஹுனைன் (வந்திருக்கிறேன்). "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது எவ்வாறு தமது தலையைக் கழுவுவார்கள்?" என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார்கள்" என்று சொன்னேன். அபூ அய்யூப் (ரலி) அவர்கள் தமது கையைத் திரையின் மீது வைத்து, தமது தலை தென்படும் அளவிற்குத் திரையைக் கீழே இறக்கினார்கள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த மனிதரிடம், "தண்ணீர் ஊற்று" என்றார்கள். அவர் தண்ணீர் ஊற்ற, அபூ அய்யூப் (ரலி) அவர்கள், பின்னிருந்து முன்னாகவும் முன்னிருந்து பின்னாகவும் தம் கைகளைக் கொண்டுசென்று தமது தலையைத் தேய்த்துக் கழுவினார்கள். பிறகு, "இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2279. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அப்போது அபூஅய்யூப் (ரலி) அவர்கள் தம் கைகளைப் பின்னிருந்து முன்னாகவும் முன்னிருந்து பின்னாகவும் தலை முழுவதற்கும் கொண்டுசென்றார்கள். (அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறிய செய்தி மிஸ்வர் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது) மிஸ்வர் (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "(இனி) ஒருபோதும் நான் உங்களிடம் வழக்காடமாட்டேன்" என்று கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 14 "இஹ்ராம்" கட்டியவர் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை.
2280. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இஹ்ராம் கட்டியிருந்த) ஒருவர் தமது ஒட்டகத்திலிருந்து விழுந்து, கழுத்து முறிக்கப்பட்டு இறந்து போனார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டுங்கள். அவருடைய இரு ஆடைகளால் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், "தல்பியா" கூறியவராக அவரை மறுமை நாளில் அல்லாஹ் எழுப்புவான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2281. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அரஃபா" பெருவெளியில் தங்கியிருந்த ஒருவர், தமது வாகனத்திலிருந்து விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்துவிட்டது. இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டபோது, "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டுங்கள். இரு ஆடைகளில் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், "தல்பியா" சொல்லிக்கொண்டிருப்பவராக மறுமை நாளில் அவரை அல்லாஹ் எழுப்புவான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2282. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் "இஹ்ராம்" கட்டியவராக நபி (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தார்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
அத்தியாயம் : 15
2283. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "இஹ்ராம்" கட்டியவராக நபி (ஸல்) அவர்களுடன் வந்தார். அப்போது தமது ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து,கடுமையாகக் கழுத்து முறிக்கப்பட்டு இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டி, அவருடைய இரு ஆடைகளை (பிரேத ஆடையாக) அவருக்கு அணிவியுங்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் "தல்பியா" கூறியவராக வருவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2284. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இஹ்ராம்" கட்டிய ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வந்தார்" என்று ஹதீஸ் துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அதில் "ஏனெனில், அவர் மறுமை நாளில் "தல்பியா" சொல்லிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்" என்று (சிறிது வித்தியாசத்துடன்) இடம் பெற்றுள்ளது. "அவர் எந்த இடத்தில் விழுந்தார் என்பதைப் பற்றி சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடவில்லை" என்று அதிகப்படியாக ஒரு குறிப்பும் அதில் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2285. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இஹ்ராம் கட்டியிருந்த ஒருவரின் கழுத்தை, அவரது வாகன (ஒட்டக)ம் முறித்து விட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டி, அவருடைய இரு ஆடைகளில் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவரது தலையை மூடாதீர்கள். அவரது முகத்தையும் மறைக்காதீர்கள். ஏனெனில், "தல்பியா"ச் சொல்லிக்கொண்டிருப்பவராக அவர் மறுமை நாளில் எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2286. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "இஹ்ராம்" கட்டியவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார். அப்போது அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டி, அவருடைய இரு ஆடைகளில் அவருக்கு (பிரேத) ஆடை அணிவியுங்கள். அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்த நிலையில் ("இஹ்ராம்" கட்டியவராக) எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2287. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இஹ்ராம் கட்டியிருந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. (அதனால் அவர் இறந்து விட்டார்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரது உடலைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டும்படி உத்தரவிட்டார்கள். அவருக்கு எந்த நறுமணமும் பூசக்கூடாது; அவரது தலையை மூடக்கூடாது. ஏனெனில், அவர் மறுமை நாளில் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்த நிலையில் ("இஹ்ராம்" கட்டியவராக) எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2288. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "இஹ்ராம்" கட்டியவராக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவர் தமது ஒட்டகத்திலிருந்து விழுந்துவிட்டார். அவரது ஒட்டகம் (அந்த இடத்திலேயே) அவரைக் கொன்றுவிட்டது. (அதனால் அவர் இறந்துவிட்டார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவருக்கு நீராட்டி, இரு ஆடையால் பிரேத ஆடை (கஃபன்) அணிவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்கள். எந்த நறுமணமும் பூசக் கூடாது; அவரது தலை வெளியில் தெரிய வேண்டும் (என்றும் உத்தரவிட்டார்கள்).
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் இந்த ஹதீஸை அபூபிஷ்ர் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அப்போது "அவரது தலையும் முகமும் வெளியில் தெரிய வேண்டும். ஏனெனில், அவர் மறுமை நாளில் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்த நிலையில் ("இஹ்ராம்" கட்டியவராக) எழுப்பப்படுவார்" என்று அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2289. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இஹ்ராம் கட்டியிருந்த) ஒரு மனிதரது கழுத்தை அவரது ஒட்டகம் முறித்துவிட்டது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டும்படியும் அவரது முகத்தையும் தலையையும் திறந்து வைக்குமாறும் உத்தரவிட்டார்கள். "ஏனெனில் அவர், மறுமை நாளில் "தல்பியா" சொன்னவராக எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2290. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இஹ்ராம் கட்டி) இருந்தார். அப்போது அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவரை நீராட்டுங்கள். ஆனால், எந்த நறுமணத்தையும் அவருக்குப் பூசாதீர்கள். அவரது முகத்தை மூடாதீர்கள். ஏனெனில் அவர், மறுமை நாளில் "தல்பியா" சொல்லிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 15 "இஹ்ராம்" கட்டுகின்றவர் "நான் நோய் போன்ற காரணங்களால் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு தடுக்கப்படும்போது) இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுவேன்" என முன் நிபந்தனையிடுவது செல்லும்.
2291. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம் சென்று, "நீ ஹஜ் செய்ய விரும்புகிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன்" என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், "நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "இறைவா, நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்" என்று கூறிவிடு!" என்றார்கள்.
ளுபாஆ (ரலி) அவர்கள் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஆவார்.
அத்தியாயம் : 15
2292. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ளுபாஆ பின்த் அஸ்ஸுபைர் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன். ஆனால், நான் நோயாளி ஆவேன்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அது தான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்" என்று கூறிவிடு!" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2293. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ளுபாஆ பின்த் அஸ்ஸுபைர் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "எனக்கு (நோய் ஏற்பட்டு) உடல் கனத்துவிட்டது. நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன். தாங்கள் எனக்கு என்ன உத்தரவிடுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக "தல்பியா"க் கூறி, "(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்" என்று கூறிவிடு!" என்றார்கள்.
பின்னர் ளுபாஆ (ரலி) அவர்கள் (முழுமையாக) ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள்.
இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15