2208. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்திருந்த நிலையில் "லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க, வல் முல்க்க லா ஷரீக்க லக்" என்று கூறியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது தல்பியாவில்) இதைவிடக் கூடுதலாக வேறெதையும் கூற மாட்டார்கள்.
இதன் அறிவிப்பாளரான சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் துல்ஹுலைஃபா பள்ளிவாசல் அருகில் தமது ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்ததும் இவ்வாறு தல்பியா கூறி "இஹ்ராம்" கட்டுவார்கள்" என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.
மேலும் (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியவாறே தல்பியா கூறி "இஹ்ராம்" கட்டுவார்கள். லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்! லப்பைக் வ சஅதைக். வல்கைரு ஃபீ யதைக். லப்பைக். வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்" எனக் கூறுவார்கள் என்றும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுவார்கள்.
அத்தியாயம் : 15
2209. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பாளர்கள் (ஹஜ்ஜின்போது) "லப்பைக், லா ஷரீக்க லக்" (உன் அழைப்பை ஏற்றோம். உனக்கு இணை ஏதுமில்லை) என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்குக் கேடுதான். போதும்! போதும்! (இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்)" என்பார்கள். (ஏனெனில்,) அதன் பிறகு இணைவைப்பாளர்கள் "இல்லா ஷரீக்கன் ஹுவ லக்க. தம்லிகுஹு வ மா மலக் (ஆனால், உனக்கு ஓர் இணையாளன் இருக்கின்றான்; அவனுக்கு நீ எசமானன். அவன் எவருக்கும் எசமான் அல்லன்; அல்லது அவனுக்கும் அவனுடைய உடமைகளுக்கும் நீயே அதிபதி) என்றும் கூறுவார்கள். இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்போது, இவ்வாறு இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 4 மதீனாவாசிகள் துல்ஹுலைஃபா பள்ளிவாசலில் "இஹ்ராம்" கட்டவேண்டுமென வந்துள்ள கட்டளை.
2210. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இந்த "பைதாஉ" எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டினார்கள் என நீங்கள் பொய்யுரைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பள்ளிவாசல் -அதாவது துல்ஹுலைஃபா பள்ளிவாசலில்தான்- "இஹ்ராம்" கட்டினார்கள்.
அத்தியாயம் : 15
2211. சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "பைதாஉ" எனும் இடத்திலிருந்தே "இஹ்ராம்" கட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டால் அவர்கள், "பைதாஉ எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டினார்கள் என நீங்கள் பொய்யுரைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹுலைஃபா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த) அந்த மரத்திற்குப் பக்கத்தில் தமது ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்தபோதே "இஹ்ராம்" கட்டினார்கள்" என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 5 வாகனம் புறப்படுவதற்குத் தயாராகி நிற்கும்போது ("இஹ்ராம்" கட்டி) "தல்பியா" கூறல்.
2212. உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "அபூஅப்திர் ரஹ்மான்! நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த்தேன். உங்கள் தோழர்களில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை" என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அவை யாவை, இப்னு ஜுரைஜே?" என்று கேட்டார்கள். "(கஅபாவைச் சுற்றி வரும்போது அதன் மூலைகளில் "ஹஜருல் அஸ்வத்" மற்றும் "ருக்னுல் யமானீ" ஆகிய) இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடக்கண்டேன். மேலும், பதனிடப்பட்ட (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளை நீங்கள் அணிவதை நான் கண்டேன். நீங்கள் (உங்கள் ஆடைக்கு) மஞ்சள் சாயமிடுவதைக் கண்டேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது, மக்கள் (துல்ஹஜ் மாத) தலைப் பிறையைக் கண்டவுடன் "இஹ்ராம்" கட்டினாலும், நீங்கள் மட்டும் துல்ஹஜ் எட்டாம் நாள் (யவ்முத் தர்வியா) வரும்வரை "இஹ்ராம்" கட்டாமலிருப்பதை நான் கண்டேன் (இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?)" என்று கேட்டேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரு மூலைகளை மட்டுமே தொட்டதை நான் பார்த்தேன் (அதனால்தான் நானும் அவ்வாறு செய்கிறேன்). (முடி அகற்றப்பட்ட) செருப்புகளைப் பொறுத்தவரை,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத காலணிகளை அணிவதையும் அதனுடன் அங்கத் தூய்மை (உளூ) செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அவற்றை அணிவதை விரும்புகிறேன். மஞ்சள் நிறமோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதனால் (தமது ஆடைக்குச்) சாயமிடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதனால் (எனது ஆடைக்குச்) சாயமிடுவதை விரும்புகிறேன். (துல்ஹஜ் எட்டாவது நாள்) "இஹ்ராம்" கட்டுவதோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும்வரை ("இஹ்ராம்" கட்டி) "தல்பியா" கூறுவதை நான் பார்த்ததில்லை.
அத்தியாயம் : 15
2213. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டையும் பன்னிரண்டு தடவைகள் நிறைவேற்றியுள்ளேன். நான் அவர்களிடம், "அபூஅப்திர் ரஹ்மான்! நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த்தேன்"என உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. ஆனால், "இஹ்ராம்" கட்டுவது தொடர்பான தகவல் வேறுவிதமாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 15
2214. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தின் வளையத்தில் காலை வைத்து, ஒட்டகம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும்போது, துல்ஹுலைஃபாவில் ("இஹ்ராம்" கட்டி) தல்பியா கூறுவார்கள்.
அத்தியாயம் : 15
2215. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகம் நிலைக்கு வந்து பயணத்திற்குத் தயாரான போது "தல்பியா" கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2216. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, அது நிலைக்கு வந்தபோது "தல்பியா" கூறியதை நான் பார்த்தேன்.
அத்தியாயம் : 15
பாடம் : 6 துல்ஹுலைஃபா பள்ளிவாசலில் தொழுதல்.
2217. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("இஹ்ராம்" கட்டி ஹஜ் கிரியைகளை) ஆரம்பித்த போது, இரவில் துல்ஹுலைஃபாவில் தங்கினார்கள்; அங்குள்ள பள்ளிவாசலில் தொழுதார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 7 "இஹ்ராம்" கட்டும்போது நறுமணம் பூசுதல்.
2218. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டும்போது, அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்காக அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்; அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது, கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2219. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டும்போது அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்காக அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது அவர்கள், கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பு அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதற்காகவும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்.
இதை, காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2220. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்கு முன் அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்காக நான் அவர்களுக்கு நறுமணம் பூசுவேன்; அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும் போதும், அவர்கள் கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பு அவர்களுக்கு நான் நறுமணம் பூசுவேன்.
இதை, காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2221. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும், அவர்கள் "இஹ்ராம்" கட்டும்போதும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்.
இதை, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2222. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜிற்காக "இஹ்ராம்" கட்டிய போதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் எனது கையால் அவர்களுக்கு ("தரீரா" எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2223. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது எதனால் அவர்களுக்கு நறுமணம் பூசினீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மிக நல்ல வாசனைப் பொருளால் (நறுமணம் பூசிவிட்டேன்)" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2224. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்கு முன் என்னால் இயன்ற மிக நல்ல வாசனைப் பொருளை அவர்களுக்குப் பூசிவந்தேன். பின்னர் அவர்கள் "இஹ்ராம்" கட்டுவார்கள்.
அத்தியாயம் : 15
2225. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது அவர்கள் "இஹ்ராம்" கட்டியதற்காகவும், அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோது அவர்கள் "தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு முன்பும் எனக்குக் கிடைத்தவற்றில் மிக நல்ல நறுமணத்தை அவர்களுக்கு நான் பூசிவிட்டேன்.
அத்தியாயம் : 15
2226. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப் பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. அதற்குப் பகரமாக "அது அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது பூசிய நறுமணமாகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2227. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("இஹ்ராம்" கட்டி) "தல்பியா" கூறியபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15