1703. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒப்பாரி வைக்கக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும், இந்த வாக்குறுதியை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறெவரும் நிறைவேற்றவில்லை. அவர்களில் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் ஒருவராவார்.
இதை ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1704. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின்" (60:12) என்று தொடங்கும் இறைவசனம் அருளப்பெற்ற போது, ஒப்பாரிவைப்பது தொடர்பான உறுதி மொழியும் அதில் ஒன்றாக அமைந்தது. அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே, இன்ன மனிதரின் குடும்பத்தாருக்கு நான் ஒப்பாரி வைப்பதற்கு மட்டும் எனக்கு விலக்கு அளியுங்கள். ஏனெனில், அறியாமைக் காலத்தில் அவர்கள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரிவைத்து) எனக்கு உதவி புரிந்தனர். எனவே, (பதிலுக்கு அவர்களுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவர்களுக்குப் பிரதியுதவி செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்ன மனிதரின் குடும்பத்திற்குத் தவிர" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 11 இறுதி ஊர்வலத்தை (ஜனாஸாவை)ப் பின்தொடர்ந்து செல்ல பெண்களுக்கு வந்துள்ள தடை
1705. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (பெண்கள்) இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டாமெனத் தடை விதிக்கப்பட்டிருந்தோம். ஆனால்,வன்மையாகத் தடுக்கப்பட்டோமில்லை.
இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1706. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நாங்கள் (பெண்கள்) இறுதி ஊர்வலத்தைப் பின்தொடரக் கூடாது எனத் தடுக்கப் பட்டோம். ஆனால் வன்மையாகத் தடுக்கப்பட்டோமில்லை" என்று உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 12 பிரேதத்தைக் குளிப்பாட்டுதல்.
1707. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் புதல்வி இறந்துவிட்டபோது அவரது பிரேதத்தை நாங்கள் நீராட்டிக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, "இலந்தை இலை கலந்த நீரால் மூன்று, அல்லது ஐந்து, அல்லது தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் அவரை நீராட்டுங்கள்; இறுதியில் "கற்பூரத்தை" அல்லது "சிறிது கற்பூரத்தை"ச் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றை முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடித்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் தமது கீழாடையை எங்களிடம் போட்டு "இதை அவரது உடலில் போர்த்துங்கள்" என்று கூறினார்கள்.
இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1708. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம்.
இதை ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1709. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் இறந்தபோது" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
இப்னு உலைய்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நாங்கள் அவர்களுடைய புதல்வியை நீராட்டிக் கொண்டிருந்தோம்" என்று உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.
மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி இறந்துவிட்டபோது அவர்கள் எங்களிடம் வந்தார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 11
1710. மேற்கண்ட ஹதீஸ் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பின்வரும் (தகவல் அதிகப்)படியாக இடம்பெற்றுள்ளது:
"இலந்தை இலை கலந்த நீரால் மூன்று, அல்லது ஐந்து, அல்லது ஏழு, அல்லது தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் அவரை நீராட்டுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், "அவர்களது தலையில் மூன்று பின்னல் இட்டோம்" என்றும் உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒற்றைப்படையாக(த் தண்ணீர் ஊற்றி) நீராட்டுங்கள்; மூன்று, அல்லது ஐந்து, அல்லது ஏழு தடவைகள் (தண்ணீர் ஊற்றுங்கள்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் "நாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம்" என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
1711. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய புதல்வியார் ஸைனப் (ரலி) அவர்கள் இறந்தபோது "இவரை மூன்று முறை,அல்லது ஐந்து முறை ஒற்றை எண்ணிக்கையில் நீராட்டுங்கள். ஐந்தாவது முறையில் "கற்பூரத்தை" அல்லது "சிறிது கற்பூரத்தை"ச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்" என்று எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் (அவ்வாறே செய்து முடித்ததும்) அவர்களுக்கு அதுபற்றி அறிவித்தோம். அவர்கள் தமது கீழாடையை எங்களிடம் தந்து "இதை அவருக்குப் போர்த்துங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1712. மேற்கண்ட ஹதீஸ் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியரில் ஒருவரை நாங்கள் நீராட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து "இவரை ஐந்து. அல்லது அதற்கும் அதிகமாக ஒற்றை எண்ணிக்கையில் நீராட்டுங்கள்" என்று கூறினார்கள் என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
மேலும், "நாங்கள் அவரது தலைமுடியை பிடரிப் பகுதியில் இரண்டும், முன்நெற்றிப் பகுதியில் ஒன்றுமாக மூன்று பின்னல்களிட்டோம்" என்று இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
1713. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியை நீராட்டும்போது, "அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத்தூய்மை (உளூ) செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் (நீராட்டலை) ஆரம்பியுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 11
1714. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய புதல்வியை நீராட்டிக் கொண்டிருந்தவர்களிடம் "அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத்தூய்மை (உளூ) செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் (நீராட்டலை) ஆரம்பியுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 13 மய்யித்திற்கு "கஃபன்”” அணிவித்தல்.
1715. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றோம். எங்களுக்கான பிரதி பலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதி பலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமலேயே (உலகைப் பிரிந்து) சென்றுவிட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் உஹுதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவருக்கு "கஃபன்" அணிவிக்கக் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்று மட்டுமே (அவருடைய உடைமைகளில்) கிடைத்தது. அதைக்கொண்டு அவரது தலைப் பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியே தெரிந்தது. ஆகவே, அவரது தலைப் பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள்மீது "இத்கிர்" எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
எங்களில் (நாடு துறந்து சென்றதன்) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க் கொண்டிருப்பவர்களும் உள்ளனர்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1716. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறந்தபோது) மூன்று வெண்ணிறப் பருத்தி ஆடைகளால் கஃபனிடப்பட்டார்கள்; அவற்றில் நீளங்கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உடலில்) போர்வை அணிவிக்கப்பட்டதாக ஒரு குழப்பம் மக்களிடையே உண்டு. (அப்படி) ஒரு போர்வை அவர்களின் கஃபனுக்காக வாங்கப்பட்டது (உண்மைதான். ஆனால்,) பின்னர் அந்தப் போர்வையை விட்டுவிட்டு மூன்று வெண்ணிறப் பருத்தி ஆடைகளால் கஃபன் அணிவிக்கப்பட்டது. அந்தப் போர்வையை (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் பெற்றுக்கொண்டு, "இதை (நான் இறந்த பிறகு) எனக்குக் கஃபன் அணிவிப்பதற்காகப் பத்திரப்படுத்துவேன்"என்று கூறினார்கள். பிறகு "அல்லாஹ் இந்தப் போர்வையை தன் தூதருக்காகத் தேர்ந்தெடுத்திருந்தால், அதில் அவர்களைக் கஃபனிடச் செய்திருப்பான். (ஆனால் அதை இறைவன் தேர்வு செய்யவில்லை.)" என்று கூறி, அதை விற்று, அந்தக் காசைத் தர்மம் செய்துவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1717. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறந்த பின்னர் என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான யமன் நாட்டுப் போர்வையில் சுற்றப்பட்டார்கள். பின்னர் அது அகற்றப்பட்டு, யமன் நாட்டின் மூன்று பருத்தி ஆடைகளால் கஃபனிடப்பட்டது. அவற்றில் தலைப் பாகையோ நீளங்கியோ இருக்கவில்லை. பிறகு அப்துல்லாஹ் பின் அபீபக்ர், அந்தப் போர்வையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, "இதில்தான் நான் கஃபனிடப்பட வேண்டும்" என்றார். பின்னர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (உடலில்) கஃபனாக அணிவிக்கப்படாத இந்த ஆடையால் நான் கஃபனிடப்படுவதா?" என்று கூறிவிட்டு, அதைத் தர்மம் செய்துவிட்டார்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்களது நிகழ்ச்சி தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 11
1718. அபூசலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எத்தனை ஆடையில் கஃபனிடப்பட்டது?" என்று கேட்டேன். அதற்கு "மூன்று பருத்தி ஆடைகளில்" என ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 11
பாடம் : 14 மய்யித்தை மூடிவைத்தல்.
1719. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது.
இதை அபூசலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 15 மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல்.
1720. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) உரையாற்றுகையில், தம் தோழர் ஒருவரை நினைவுகூர்ந்தார்கள். அவர் இறந்தபோது நிறைவான கஃபன் அணிவிக்கப்படாமல் (அரைகுறை கஃபனில்) இரவிலேயே அடக்கம் செய்யப்பட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் (தாம் கலந்துகொண்டு) தொழவைக்கப்படாமல் இரவிலேயே ஒருவர் அடக்கம் செய்யப்படுவதைக் கண்டித்தார்கள். ஒருவருக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டால் தவிர (அவ்வாறு செய்யவேண்டாம் எனத் தடைவிதித்தார்கள்). மேலும், "உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குக் கஃபனிடும்போது அழகிய முறையில் கஃபனிடட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 16 பிரேதத்தைத் துரிதமாக எடுத்துச் செல்லல்.
1721. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதத்தைத் துரிதமாகக் கொண்டுசெல்லுங்கள். ஏனெனில், அது (பிரேதம்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் (அதற்கான) நன்மையின் பக்கம் அதை விரைவுபடுத்துகிறீர்கள். வேறு விதமாக அது இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கி வைக்கிறீர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தே அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்றே நான் கருதுகிறேன்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
1722. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதத்தைத் துரிதமாகக் கொண்டு செல்லுங்கள். ஏனெனில், அது நல்லதாயிருந்தால், நன்மையின் பக்கம் அதைக் கொண்டு சேர்க்கிறீர்கள். அது வேறுவிதமாக இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கிவைத்தவர்கள் ஆவீர்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11